முஸ்லிம் நாடுகளின் ஆதரவைப் பெறவே சடலங்களை அடக்கம் செய்ய அரசாங்கம் அனுமதித்தது – கோவிந்தன் கருணாகரம்

முஸ்லிம் நாடுகளின் ஆதரவைப் பெறும் நோக்கிலேயே கொரோனாவால் உயிரிழந்த முஸ்லிம் மக்களின் சடலங்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்கியிருக்கிறார்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.

வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், “முஸ்லிம் மக்களது இறந்த உடல்களை புதைப்பதா அல்லது எரிப்பதா என்கின்ற நீண்ட நாள் விவாதங்கள் ஒரு முடிவுக்கு வந்திருக்கின்றன.

உலகத்தில் 190இற்கு மேற்பட்ட நாடுகளில் கொரோனாவால் இறந்த மக்களின் உடலை புதைக்கும் நிலையில், இலங்கையில்கூட இது தொடர்பாக நியமிக்கப்பட்ட தொழில்நுட்ப குழு எரிக்கலாம் அல்லது புதைக்கலாம் என அறிக்கை கொடுத்தும் இலங்கை அரசு புதைக்க விடாமல் இருந்தது.

இந்தக் காலகட்டத்தில் புதைப்பதற்கு அனுமதி கொடுத்திருக்கின்றார்கள் என்றால் ஐக்கிய நாடுகள் மனிதவுரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக பிரேரணை ஒன்று வரவுள்ள நிலையில், முஸ்லிம் நாடுகளின் ஆதரவைப் பெறும் நோக்கிலேயே அடக்கம் செய்ய அனுமதி வழங்கியிருக்கிறது.

ஏனைய போராட்டங்களுக்கோ, ஆர்ப்பாட்டங்களுக்கோ அல்லது பாகிஸ்தான் பிரதமர் இங்கு வந்து சென்றதற்காகவோ அல்ல.

வர்த்தமானி அறிவித்தலைக்கூட இரத்து செய்யக்கூடிய ஒரு நாடாகதான் இலங்கை இருக்கிறது. ஏனெனில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் உத்தரவின் பேரில் வெளியிடப்பட்ட வர்த்தமானிகூட 4 மணித்தியாலங்களில் ஜனாதிபதியின் உத்தரவில் இரத்து செய்யப்பட்ட வரலாறும் இருக்கின்றது.

அதேபோல் சுகாதார அமைச்சரால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானியும் தேவையேற்பட்டால் இரத்து செய்யப்படலாம்” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.