கிளிநொச்சியில் கத்திக் குத்துக்கிலக்காகி குடும்பஸ்தர் ஒருவர் பலி

கிளிநொச்சியில் கத்திக் குத்துக்கிலக்காகி குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. கிளிநொச்சி வட்டக்கச்சி வைத்தியாலைக்கு அண்மித்த பகுதியிலேயே இந்தத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

கிளிநொச்சி தர்மபுரத்தில் நேற்று மாலை 5 மணியளவில் கத்திக் குத்துத் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்த நபர் தனது வீட்டில் நின்றவேளையே வீட்டு வாசலில் வைத்து 18 வயது பூர்த்தி அடையாத இருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கியதாக காவல்துறையில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

குறித்த சம்பவத்தில் படுகாயமடைந்த குறித்த நபர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த நபர் அதே பகுதியை சேர்ந்த 32 வயதான அருளம்பலம் துசியந்தன் 2 பிள்ளைகளின் தந்தை எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை தர்மபுரம் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.