வாழைச்சேனை பொத்தானை பகுதியில் புதையல் தோண்டிய 8 சந்தேக நபர்கள் கைது

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொத்தானை பகுதியில் வைத்து சட்டவிரோதமான முறையில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட 8 சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.பொத்தானை பகுதியில் புதையல் தோண்டும் நடவடிக்கை இடம்பெற்று வருவதாக வாழைச்சேனை விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த தகவலையடுத்து, வாழைச்சேனை பொலிஸாருடன் இணைந்து, அதிரடி கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

மேற்கொள்ளப்பட்ட சுற்றிவலைப்பின் போது, கண்டி, வாழைச்சேனை, ஓட்டமாவடி, இரத்தினபுரி, வெலிக்கந்தை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 8 நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், புதையல் தோண்டுவதற்குப் பயன்படுத்தப்பட்ட பூஜைப் பொருட்கள் மற்றும் ஆயுதப் பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் இடம்பெற்று வரும் சட்டவிரோத செயல்களைத் தடுக்கும் வகையில், தனது தலைமையில், வாழைச்சேனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஜி.ஜெயசுந்தரவின் வழிகாட்டலில், வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் விஷேட குழு செயற்பட்டு வருவதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.