அடுத்தவாரம் முதல் அதிகரிக்கப்போகும் இலங்கை மக்களின் வாழ்க்கைச் செலவு?

இலங்கையில் அடுத்த சில வாரங்களில் வாழ்க்கை செலவு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன (Bandula Gunawardena) எச்சரித்துள்ளார்.

வர்த்தகர்கள் இறக்குமதி செலவீனங்களை செலுத்துவதற்கான அமெரிக்க டொலர்களில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறையே இதற்கு காரணம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பின் ஊடகம் ஒன்றுக்கு தகவல் வழங்கிய அவர்,

உலக சந்தை விலைகளும் அதிகரித்துள்ளமை காரணமாக பால் உணவு, உள்நாட்டு எரிவாயு, கோதுமை மா மற்றும் சிமென்ட் உள்ளிட்ட பொருட்களின் விலை அதிகரிக்கும் என்று பந்துல குணவர்தன கூறியுள்ளார்.

உலக சந்தையில் விலை உயரும் போது அமெரிக்க டொலர்களுக்கு நெருக்கடியை, இலங்கை எதிர்கொள்ளும் உண்மையை மறைக்க முடியாது. அத்துடன் இனி எந்த நிவாரணங்களையும் வழங்க முடியாது, என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஒரு முடிவை அறிவிப்பதற்கு முன்னர், விலை உயர்வு பற்றிய விடயம் அமைச்சரவையில் விவாதிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் நிதியமைச்சர் பசில் ராஜபக்சவுடன் மெய்நிகர் சந்திப்புக்கு அழைக்கப்பட்ட இறக்குமதியாளர்களுக்கு விலை உயர்வு தொடர்பான நடவடிக்கைகள் குறித்து எதிர்வரும் செவ்வாய்க்கிழமைக்குள் தெரிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

உள்ளூர் வங்கிகளில் போதிய அமெரிக்க டொலர்கள் இல்லாததால், கொழும்பு துறைமுகத்தில் தேக்கி வைக்கப்பட்டுள்ள பொருட்களை அகற்ற முடியவில்லை என இறக்குமதியாளர்கள் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளனர்.

பிரச்சினைகளை தீர்ப்பதில் அரசாங்கம் தலையிடும் வகையில், இறக்குமதியாளர்கள் கணக்குகளை வைத்துள்ள வங்கிகளின் பட்டியலை சமர்ப்பிக்கும் படி இதன்போது அரசாங்கத் தரப்பில் கேட்கப்பட்டதாக இறக்குமதியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

பொருட்களின் பற்றாக்குறை காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரிக்கக்கூடும் என்று வர்த்தகர்கள் எச்சரித்துள்ளனர்.

அதேநேரம் பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரிப்பதைத் தடுக்க மத்திய வங்கி அடுத்த இரண்டு வாரங்களுக்குள் இறக்குமதியாளர்களுக்கு சலுகைகளை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது என்று அமைச்சர் பந்துல குணவர்தன கூறியுள்ளார்.

இதேவேளை, உள்நாட்டு சமையல் எரிவாயுவின் விலையை உயர்த்துவதற்கான திட்டம் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி 12.5 கிலோ உள்நாட்டு சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை 550 ரூபா வரை அதிகரிக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையில், லாஃப் எரிவாயு பற்றாக்குறை, 383 ரூபா விலை உயர்வுக்கு அரசாங்கம் அனுமதித்தாலும், இன்னும் தொடர்கின்றது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.