கோட்டாபயவை பாதுகாக்கவே காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நிதி நிவாரணம் – யாழில் பகிரங்க கண்டனம்

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவை காப்பாற்றுவதற்காகவே இரண்டு இலட்சம் ரூபாய்கள் நிவாரணம் வழங்குவதற்கு ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

விலைமதிப்பற்ற உறவுகளுக்கு விலை பேசுவதை நிறுத்திக்கொள்ளுமாறு இன்று யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகசந்திப்பில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வலியுறுத்தினர்.

இதேவளை, காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவினர்களின் அமைப்புக்களின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் காணாமல்போனோர் பற்றிய அலுவலக அதிகாரிகள் இன்று விசாரணைகளை ஆம்பித்துள்ளனர்.

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்தில் வைத்து காணாமல்போனோரின் உறவினர்களிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், உறவினர்கள் முன்வைக்கும் கோரிக்கைக்கு இணங்க அவர்களுக்கு தேவையான உதவிகளை மேற்கொள்வதற்கு பரிந்துரை செய்யவுள்ளதாக அலுவலகத்தின் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

 

பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் வைத்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தமது முறைப்பாடுகளை வழங்கிய நிலையில், மட்டக்களப்பைச் சேர்ந்த அதிகாரிகள் முறைப்பாடுகளைப் பதிவு செய்தனர்.இன்றைய விசாரணைக்கு 75 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், மாவட்டத்தில் மொத்தமாக 450 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள செங்கலடி, மண்முனை வடக்கு ஆகிய பிரதேச செயலகங்களில் 5 நாட்கள் இவ்வாறு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, முறைப்பாடுகள் பதிவு செய்யப்படவுள்ளன.

 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.