சாவகச்சேரியில் அதிகரிக்கும் போதைவஸ்து பாவனையை கட்டுப்படுத்த நடைபாதை வியாபாரத்தை நிறுத்துங்கள்-நகரசபை உறுப்பினர் கோரிக்கை.

சாவகச்சேரி நகர்ப் பகுதியில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து இடம்பெறுகின்ற போதைவஸ்து விநியோகத்தை கட்டுப்படுத்த வேண்டுமானால் புதிய நடைபாதை வியாபாரிகளுக்கு நகரசபை அனுமதி வழங்கக் கூடாது என சாவகச்சேரி நகரசபை உறுப்பினர் சு.நிதிகேசன் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த செவ்வாய்க்கிழமை நகரசபையில் இடம்பெற்ற மாதாந்த அமர்வின் போதே அவர் இதனைத் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்;
சாவகச்சேரி நகர் பகுதியில் போதைப்பொருள் விநியோகம் மற்றும் பாவனை வெகுவாக அதிகரித்துள்ளது.போதைவஸ்தை கட்டுப்படுத்த ஏனைய தரப்புக்களை நம்பி எந்தவிதமான பயனும் இல்லை.எனவே சாவகச்சேரி நகரசபை எமது பிரதேசத்தின் நலனை கருத்திற்கொண்டு புதிய நடைபாதை வியாபாரிகளுக்கான அனுமதியை தற்காலிகமாக வழங்காதிருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.தற்போது சாவகச்சேரி நகர் பகுதியில் சில இடங்களில் நடைபாதை வியாபாரம் என்ற போர்வையில் போதைப்பொருள் விற்பனை இடம்பெறுகிறது.அதுவும் குறிப்பாக பாடசாலைகளை இலக்கு வைத்தே குறித்த போதைப்பொருள் விற்பனை இடம்பெற்று வருகிறது.புதிய நடைபாதை வியாபாரிகளுக்கு அனுமதி வழங்காதிருப்பதுடன்-தற்போது நடைபாதை வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றவர்களையும் நகரசபையின் பொதுச்சுகாதாரப் பரிசோதகர் மற்றும் வருமான வரிப் பரிசோதகர்கள் ஊடாக தொடர்ச்சியாக கண்காணித்து எமது பிரதேசத்தை போதைவஸ்தின் பிடியில் இருந்து மீட்க வேண்டும்.என மேலும் அவர் தெரிவித்திருந்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.