மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் உள்ள அனைத்து பிரதான வீதிகளும் காபட் பாதைகளாக மாற்றியமைக்கப்படும் – ராமேஷ்வரன் எம்.பி

மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் உள்ள அனைத்து பிரதான வீதிகளும் காபட் பாதைகளாக மாற்றியமைக்கப்படும்.” – என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் நிதிச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் தெரிவித்தார்.

புரட்டொப் பாதையை புனரமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” அமரர். ஆறுமுகன் தொண்டமான் அமைச்சராக இருந்தபோது குறித்த வீதியை புனரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன்படி 3 கிலோமீற்றர் காபட் இடப்பட்டது. எனினும், நல்லாட்சி எனக் கூறிக்கொள்ளும் அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் அத்திட்டம் அப்படியே நிறுத்தப்பட்டது.

இவ்வாறு நிறுத்தப்பட்ட புரட்டொப் பாதையை புனரமைப்பதற்கு தற்போதைய ஆட்சியின் கீழ் எமது பொதுச்செயலாளர் அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  18 கிலோமீற்றர் தூரம் முழுமையாக காபட் இடப்படும். அதேபோல் இவ்வீதியில் உள்ள 5 பாலங்களை புனரமைப்பதற்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் உள்ள பாதைகளை காபட் பாதைகளாக மாற்றுவதற்கான நடவடிக்கை அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் நிச்சயம் முன்னெடுக்கப்படும். விடயதானத்துக்கு பொறுப்பான இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா அண்மையில் சில திட்டங்களை ஆரம்பித்துவைத்தார். அடுத்துவரும் நாட்களிலும் பணிகள் தொடரும். ஐந்தாண்டு காலப்பகுதிக்குள் மலையக அபிவிருத்திக்காக முழு பங்களிப்பையும் இ.தொ.கா. வழங்கும் என்பதுடன் அதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுக்கும்.” – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.