வேறுபாடுகளைக் களையும் தருணமாக தீபாவளி திருநாளைக் கொண்டாடுவோம்! – வாழ்த்துச் செய்தியில் பிரதமர் மஹிந்த தெரிவிப்பு…

”நீண்டகாலமாக எமது மக்களைப் பிரித்து வைத்திருந்த எல்லா வேறுபாடுகளையும் களைவதற்குரிய தருணமாக இந்தத் தீபாவளித் திருநாளைக் கொண்டாடுவோம்.”

– இவ்வாறு தீபாவளித் திருநாளையொட்டி தாம் விடுத்த செய்தியில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அந்தச் செய்தியில் அவர் மேலும் தெரிவித்திருப்பவை வருமாறு:-

“இருளை அகற்றி ஒளி ஏற்றும் இந்து மக்களின் உயர்ந்த சமயப் பண்டிகைத் தினமான தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு இந்த வாழ்த்துச் செய்தியை விடுப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.

இருட்டு வழியிற் தீபம் இருந்தால் அதுவே வழிக்குத் துணையாக அமையும். மனித வாழ்க்கைப் பாதைக்கு அருட்தீபம் துணை நின்றால் வாழ்வு சுபீட்சமாகும். அத்தகைய அருட் தீபமாகிய ஆன்மீக ஞான ஒளியை இறை வழிபாடு மூலம் பெறும் சிறப்பு வாய்ந்த நன்னாளே தீபாவளித் திருநாள்.

தேசிய ஒற்றுமைக்கு இது ஒரு சிறந்த நாளாகும். எல்லா மதங்களிலும் விளக்கு ஏற்றுவதன் காரணம் இருளையும் அறியாமையையும் அகற்றி ஒளியை பரப்புவதற்கே. தீபாவளியும் அதன் எதிர்பார்ப்புகள் நிறைந்த தீப ஒளியும் சமூகங்களுக்கு மத்தியில் சிறந்த புரிந்துணர்வுக்கான சந்தர்ப்பத்தை வழங்குகின்றது.

மிக நீண்டகாலமாக எமது மக்களைப் பிரித்து வைத்திருந்த எல்லா வேறுபாடுகளையும் களைவதற்குரிய தருணமாக இந்தத் தீபாவளித் திருநாளைக் கொண்டாடுவோம்.

இந்த ஒளியை நாம் அணைய விடாமல் பாதுகாத்து மறுபடியும் இருளுக்குள் மூழ்காமல் எம்மைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.

இன்று நம் தேசம் ‘நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு’ எனும் அரசின் தேசிய கொள்கைக்கு அமைவாக ஒளி நிறைந்த வளர்ச்சிப் பாதையில் பயணிக்க ஆரம்பித்திருக்கின்றது. அனைத்துத் துறைகளிலும் நாம் முன்னேற்றம் காண முயல்கின்றோம்.

இன்று உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா நோய்த் தொற்றிலிருந்து இலங்கை மக்களைப் பாதுகாக்கும் பணியை மக்கள் அனைவரதும் ஒத்துழைப்புடன் வெற்றிகரமாக அரசு செயற்படுத்தி வருகின்றது.

கொரோனா நோய்த் தொற்றிருந்து இலங்கைத் திருநாடு விரைவில் மீள்வதற்கும் எம் மக்களுக்கு எல்லா சுபீட்சங்களையும் தரும் நல்லதோர் எதிர்காலத்தின் ஆரம்ப நாளாக இந்தத் தீபாவளித் திருநாள் அமையட்டும்.

இலங்கைவாழ் இந்து மக்கள் அனைவருக்கும் எனது தீபாவளி நல்வாழ்த்துக்கள்!” – என்றுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.