திருகோணமலையில் டெங்கு பரவும் அபாயம்;எச்சரிக்கையாக இருக்குமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள்.

கொவிட் 19 தொற்று காரணமாக மறக்கடிக்கப்பட்ட  டெங்கு மீண்டும் பரவக்கூடிய அபாய நிலை ஏற்பட்டுள்ளதாக திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வீ.பிரேமானந் தெரிவித்துள்ளார்.
திருகோணமலை, சீனக்குடா, தம்பலகாமம்,மற்றும் கந்தளாய் பகுதிகளில் டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் மக்கள் தங்களது சுற்றுப்புறச் சூழல்களை சுத்தமாக வைத்திருக்கும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
கொவிட் 19 காரணமாக டெங்கு விடயத்தில் பொதுமக்கள் கவனயீனமாக செயற்பட்டு வருவதாகவும் இதனால் தற்பொழுது டெங்கு நுளம்பு பரவக்கூடிய இடங்கள் அதிகரித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
டெங்கு நுளம்பு குடம்பிகள் காணப்பட்ட 600க்கும் மேற்பட்ட இடங்கள்  கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் திருகோணமலை பிராந்திய தொற்றுநோய் தடுப்பு வைத்திய அதிகாரி தங்கவேல் நிலோஜன் தெரிவித்தார்.
இதேவேளை திருகோணமலை மாவட்டத்தில் அனைத்து சுகாதார வைத்திய அதிகாரிகள் பணிமனையினால் சிரமதானங்கள் மற்றும் விழிப்புணர்வு செயற்பாடுகள் போன்ற பல முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வருகின்ற போதிலும் பொதுமக்கள் சுகாதார திணைக்களத்துக்கு தங்களது ஒத்துழைப்பை வழங்குமாறும், தங்களது வீடுகளையும் சுற்றுப்புறச்சூழல்களையும் சுத்தமாக வைத்திருக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை டெங்கு பரவும் விதத்தில் செயற்படுபோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் கூறினார்.
(பதுர்தீன் சியானா)

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.