நாடாளுமன்றம் வர பஸில் பின்னடிப்பு! – கோட்டாவே தெரிவிப்பு…

நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்குமாறு, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நிறுவுநரும் முன்னாள் அமைச்சருமான பஸில் ராஜபக்சவுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளார்.

ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற ஆளும் கட்சி உறுப்பினர்களுடான கலந்துரையாடலின்போது பஸில் ராஜபக்சவின் நாடாளுமன்றப் பிரவேசம் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதற்கமைய, கடந்த சில நாட்களுக்கு முன்னரும், தான் பஸில் ராஜபக்சவிடம் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார் என்றும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்

எனினும், தனக்கு விரைவில் நாடாளுமன்றம் வருவதற்கான எண்ணம் கிடையாது எனப் பஸில் ராஜபக்ச  குறிப்பிட்டார் என்றும் ஜனாதிபதி இதன்போது கூறியுள்ளார்.

இதேவேளை, பஸில் ராஜபக்ச நாடாளுமன்றத்துக்கு வருகை தர வேண்டும் என வலியுறுத்தி ஆளும் கட்சியினரால் தயாரிக்கப்பட்டுள்ள கடிதம் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

குறித்த கூட்டத்தில் ஒவ்வொரு மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி ஆளும் கட்சியின் 24 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பஸில் ராஜபக்ச நாடாளுமன்றம் வருவதை பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான குழுவொன்று விரும்பவில்லை எனவும், அதனாலேயே பஸில் ராஜபக்ச தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் பிரவேசிக்கப் பின்னடிக்கின்றார் எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பின்வரிசை எம்.பிக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர் என அறியமுடிந்தது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.