காரைதீவு-மாவடிப்பள்ளியில் அமைக்கப்பட்ட தொலைத்தொடர்பு கோபுர நிர்மாணம் நீதிமன்ற உத்தரவினால் இடைநிறுத்தம்..!

(நூருல் ஹுதா உமர்)

காரைதீவு பிரதேச சபை எல்லைக்குட்பட்ட மாவடிப்பள்ளியில் மக்கள் குடியிருக்கும் பகுதியில் உயர்ந்த கட்டிடம் ஒன்றின் மேல் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனத்தின் 4G தொலைத்தொடர்பு கோபுரம் ஒன்று நிர்மாணிக்கும் வேலைகள் இடம்பெற்று வருகின்றது. இந்த தொலைத்தொடர்பு கோபுரம் அமைக்கும் பணிகள் அயலவர்களின் அனுமதியில்லாமலும் ஆலோசனைகள் பெறாமலும் அமைக்கப்பட்டு வருவதாக அயலவர்கள் சுட்டிக்காட்டி அதனைத் தடுக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த தொலைத்தொடர்பு கோபுரம் அமையப்பெறுவதால் அயலவர்கள் பல்வேறு சுகாதாரத் தாக்கத்திற்கு உள்ளாகக் கூடும் என்பதை அறிந்து காரைதீவு பிரதேச சபையில் தொலைத்தொடர்பு கோபுர நிர்மாணத்தை  நிறுத்துமாறு கோரிக்கையிட்டனர். இருந்த போதிலும் காரைதீவுப் பிரதேச சபையின் தவிசாளர் மாவடிப்பள்ளியை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதேச சபை உறுப்பினர்கள் இருவர் இருந்த போதும் அவர்களின் அனுமதியையோ ஆலோசனைகளையோ பெறாமல் தொலைத்தொடர்பு கோபுரம் அமைப்பதற்கு அனுமதி வழங்கியதாக மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

காரைதீவு பிரதேச சபையின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உறுப்பினர் முஸ்தபா ஜலீலின் தலைமையில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு கல்முனை மேல் நீதிமன்றில் தொலைத்தொடர்பு கோபுர நிர்மாணிப்புக்கு எதிராக வழக்குத்தாக்கள் செய்யப்பட்டது.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் முஸ்தபா ஜலீல் எங்களினால் மேல்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு  நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு கடந்த செவ்வாய்க்கிழமை அழைக்கப்பட்டது. இதன்போது அனுமதி வழங்கிய காரைதீவுப் பிரதேச சபையின் செயலாளரும் விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்தார்.

இது சம்மந்தமாக தீர விசாரித்த மேல்நீதிமன்ற நீதிபதி அயலவர்களின் அனுமதியில்லாமல் எவ்வாறு பிரதேச சபையினால் அனுமதி வழங்கப்பட்டது என வினவி, மக்களுக்கு பின் விளைவுகளை ஏற்படுத்தும் தொலைத்தொடர்பு கோபுர அமைப்பு வேலைகளை உடனடியாக நிறுத்துமாறும் உத்தரவிட்டு பெப்ரவரி 08ம் திகதி மீள வழக்கை அழைக்க உத்தரவிட்டது என தெரிவித்தார். 

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.