மூத்த ஊடகவியலாளர் பூபாலசிங்கம் சிவப்பிரகாசம் அவர்கள் காலமானார்

(வி.சுகிர்தகுமார் )

  இலங்கைத்திருநாட்டின் மற்றுமொரு மூத்த ஊடகவியலாளர் பூபாலசிங்கம் சிவப்பிரகாசம் அவர்கள்நேற்று (01) 90ஆவது வயதில் இறைபதமடைந்தார்.

அம்பாரை மாவட்டத்தின் அக்கரைப்பற்று பிரதேசத்தில் 1931ஆம் ஆண்டு பிறந்து வாழ்ந்து வந்த அவர் மட்டக்களப்பை சேர்ந்த இரத்தினம் என்பவரை திருமணம் செய்து கொண்டு இரு ஆண்பிள்ளைகளுடன் அக்கரைப்பற்றிலேயே இறுதிவரை வாழ்ந்து வந்தவர்.

இவர் ஊடகத்துறையில் நடுநிலையினை பேணிவந்தவர் என்பதோடு 50 வருடத்திற்கும் மேற்பட்ட அனுபவத்தினை கொண்டவர் என்பதும் கலாசூரி உள்ளிட்ட விருதுகளை தனதாக்கி கொண்ட பெருமைக்குரியவராவும் திகழ்கின்றார்.

அம்பாரை மாவட்ட செயலகத்தில் தட்டெழுத்தாளராக பணிபுரிந்த இவர் அம்பாரை ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தின் ஆரம்பகால நிருவாக உறுப்பினராகவும் இறைசேவை ஆற்றிவந்துள்ளார்.

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் தினகரன் வீரகேசரி போன்ற பத்திரிகைகளிலும் பிராந்திய செய்தியாளராகவும் கடமைபுரிந்த இவர்
இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன ஊழியராகவும் கடமை புரிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அன்னாரின் இழப்பு ஊடகத்துறைக்கு பெரும் இழப்பு என்பதுடன் அக்கரைப்பற்று பிரதேசத்திற்கும் பேரிழப்பாகும்.

அன்னாரின் இறுதிக்கிரியை நாளை(02) காலை 10 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று நல்லடக்கம் அக்கரைப்பற்று இந்துமயானத்தில் இடம்பெறும்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.