விளையாட்டு மைதானமொன்றை மேம்படுத்தும்போது வைத்தியசாலையொன்றை அமைப்பதற்கான அவசியம் குறைவடையும் – மஹிந்த ராஜபக்ஷ

விளையாட்டு மைதானமொன்றை மேம்படுத்தும்போது வைத்தியசாலையொன்றை அமைப்பதற்கான அவசியம் குறைவடையும் என  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று (02) முற்பகல் அலரி மாளிகையில் வைத்து தெரிவித்தார்.

ஆற்றல் மிகுந்த சந்ததியினருக்காக ‘கிராமத்திற்கு மைதானம்’ தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 332 கிராமிய விளையாட்டு மைதானங்களை ஒரே தடவையில் அபிவிருத்தி செய்யும் நிகழ்வில் பங்கேற்று  பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

விளையாட்டுத்துறை அமைச்சர் கௌரவ நாமல் ராஜபக்ஷ அவர்களது எண்ணக்கருவிற்கமைய விளையாட்டுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தி, நாட்டில் புதிய விளையாட்டு கலாசாரத்தை உருவாக்கும் நோக்கத்துடன் இத்தேசிய வேலைத்திட்டம் செயற்படுத்தப்படும்.

‘கிராமத்திற்கு மைதானம்’ தேசிய வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டு  பிரதமர் ஆற்றிய முழுமையான உரை வருமாறு,

விளையாட்டிற்காக நாம் இன்று இச்சந்தர்ப்பத்தில் நாடு முழுவதும் காணப்படும் 332 விளையாட்டு மைதானங்களின் அபிவிருத்தியை ஆரம்பித்துள்ளோம்.  ஒரே தடவையில் பணிகளை ஆரம்பிப்பதனால் இவ்விளையாட்டு மைதானங்கள் அனைத்திற்கும் எமக்கு செல்ல முடியாது. அதனால் இவ்விளையாட்டு மைதானங்களில் தெரிவுசெய்யப்பட்ட ஒரு விளையாட்டு மைதானத்திற்கு வருகை தந்து பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வை முன்னெடுக்க நாம் தீர்மானித்தோம். ஏனெனில் அனைத்து மைதானங்களும் எமக்கு முக்கியமாகும்.

இளைய தலைமுறையினர் மற்றும் குழந்தைகள் மீது சுமத்தப்படும் பல்வேறு குற்றச்சாட்டுகள் காணப்படுகின்றன என்பது உங்களுக்கு தெரியும். இளைய தலைமுறையினருக்கு பொறுமை இல்லை என பெற்றோர் கூறுகின்றனர். மேலும், இளைய தலைமுறையினர் குறுகிய சுயநலம் மிகுந்த எண்ணம் கொண்டவர்கள் என்றும் சமூக உணர்வற்றவர்கள் என்றும் பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.

அத்துடன், கையடக்க தொலைபேசி மற்றும் மடிக்கணினிகளுக்கு அடிமையாகி உள்ளதாகவும் மற்றொரு தரப்பினர் குறிப்பிடுகின்றனர். இவ்வாறு குற்றம் சாட்டுகின்றார்களே தவிர அதற்கான காரணம் குறித்து ஆராய்வதற்கு நாம் பழக்கப்படவில்லை.

கிராமங்களில் வேண்டிய தோட்டங்களில் வேண்டிய விளையாட்டில் ஈடுபட கூடியளவிற்கு இடவசதி காணப்பட்டது. ஆனால் தற்போது நாம் வீதியில் செல்லும்போது தெரியும் பெரும்பாலான நகரங்களைப் போலவே, கிராமப்புறங்களிலும் இடவசதிகள் மிகவும் குறைந்து வருகின்றன. அதேபோன்று இன்று வாகன நிறுத்துமிடமொன்றை அமைப்பதற்கான ஆர்வம், பிள்ளைகளுக்காக மைதானமொன்றை நிர்மாணிப்பதில் இல்லை என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள் என்று எண்ணுகின்றேன்.

இந்நாட்டின் பிள்ளைகளுக்கு விளையாட்டில் ஈடுபடுவதற்கு இடவசதி உள்ளதா என்பது தொடர்பில் நாம் புதிதாக சிந்தித்து பார்க்க வேண்டும். இந்நிலையிலிருந்து நாட்டை மீட்பதற்கும், தேசத்தை காப்பாற்றுவதற்குமான ஒரு சிறந்த நடவடிக்கையாக இது அமையும் என்று நான் நம்புகின்றேன்.
பாடசாலையொன்று திறக்கப்படும் போது சிறைச்சாலையொன்று மூடப்படும் என்று கூறுவார்கள். அதனை நன்கு புரிந்து கொண்டு கல்விக்காக நாம் பாரிய சேவையை ஆற்றி வருகின்றோம். அதேபோன்று விளையாட்டு மைதானமொன்றை மேம்படுத்தும் போது வைத்தியசாலையொன்றை நிறுவுவதற்கான தேவை குறைவடையும் என நான் நினைக்கின்றேன். இன்று நம் நாட்டின் குடிமக்களின் ஆயுட்காலம் என்பது வயதிற்கும் அதிகமாகும். ஆனால் நீண்ட ஆயுளைக் கொண்டிருந்தாலும் நோயாளியாக வாழ்வதில் ஏதேனும் பயன் உள்ளதா? இன்று உலகில் சிறந்த, ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வதைப் பற்றி சிந்திக்க வேண்டிய நேரம் இது. அதனால்தான் ஒரு பக்கம் விளையாட்டு இருக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன்.

விளையாட்டு என்பது காலத்தை வீணடிக்கும் ஒரு செயல் என இன்றைய எமது சில பெற்றோர்கள் நினைக்கின்றனர். ஆனால் விளையாட்டுக்கு இன்று அதிக கேள்வி உள்ளது. இன்று விளையாட்டு என்பது ஒருபுறம் சந்தை வாய்ப்புள்ள மற்றும் தொழில்முறை விடயமாக மாறியுள்ளது.

இன்று நம் நாட்டில் விளையாட்டுப் பாடசாலைகளின் எண்ணிக்கையை 30 ஆக உயர்த்த நடவடிக்கை எடுத்துள்ளோம். இந்த நிலைமை எதிர்காலத்தில் மேலும் மேம்படுத்தப்பட வேண்டும். ஒரு நாடாக நாம் நல்ல வீரர்களை உருவாக்க வேண்டும்.

இன்று நாட்டில் விளையாட்டை பார்வையிடும் நிலையே காணப்படுகின்றதே தவிர, விளையாட்டில் ஈடுபடும் நிலை இல்லை. பார்வையிடுவதற்கு பல விடயங்கள் உள்ளன. ஆனால் அவர்கள் விளையாட்டில் ஈடுபடுவதே சிறந்ததாகும். அத்தகைய தலைமுறையினரே எதிர்காலத்தில் வெற்றிகரமான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழும் ஆற்றலைக் கொண்டிருப்பர். வெற்றியையும் தோல்வியையும் அனுபவிக்க முடியும்.

இதற்கு சுமார் ஒரு வாரம் முன்னதாக எமது நாட்டிற்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் விஜயம் செய்தார். அவர் அரசியலுக்கு வந்து தனி கட்சி அமைத்து பணியாற்றி பல ஆண்டுகள் தோல்வியடைந்து அவை அனைத்தையும் தாங்கிக் கொண்டிருந்தாக குறிப்பிட்டார்.

அக்காலத்தில் அவரை பார்த்து பலரும் நகைத்தனராம். எனினும் அவர் பொறுமையாக கையாண்டு இறுதியில் பாகிஸ்தானின் பிரதமரானார். அவருக்கு மைதானத்தில் கிடைத்த அனுபவமே அவ்வாறானதொரு பயணத்தை அடைவதற்கு தாக்கம் செலுத்தியது என இம்ரான் கான் அவர்கள் குறிப்பிட்டார்.
எமக்கும் அப்படித்தான். நாம் வாழ்க்கையில் தோல்விக்கு முகங்கொடுத்த பல சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றன. 2015 ஜனவரி 08ஆம் திகதி நாம் தோல்வியடைந்து வீடு சென்றோம். எமது கட்சியை நாம் இழந்தோம். இந்நாட்டின் பிரதான இரு கட்சிகளுக்கு அப்பால் நாம் ஒரு கட்சியை கட்டியெழுப்பினோம்.

கட்சியை கட்டியெழுப்பி 4 வருடங்களுக்குள் அனைத்து சவால்களை வெற்றி கொண்டு நாம் மீண்டும் நாட்டின் ஆட்சியை கைப்பற்றினோம். சிறு பராயத்தில் விளையாட்டில் ஈடுபட்டு பொறுமையை போன்றே தோல்வியையும் பழகியமையாலேயே எம்மால் அவ்வாறு செய்ய முடிந்தது என்று நான் நம்புகின்றேன்.நாங்கள் போரை வென்றபோது எங்களுக்கு தேவையான பொறுமையையும் போர்க்குணத்தையும் விளையாட்டே எமக்கு பெற்றுக் கொடுத்தது என்று நான் கூற வேண்டும்.

அதனால் இன்று நாம் அனைத்து விதத்திலும் மாறுபட்ட கண்ணோட்டத்துடன் மைதானங்களை நோக்குகின்றோம் என்பது உங்களுக்கு விளங்கும் என நினைக்கிறேன். இன்று முதல் நாம் இந்நாட்டிலுள்ள பாடசாலை மைதானங்களை மேம்படுத்துவோம். அதேபோன்று பொது விளையாட்டு மைதானங்களை மேம்படுத்துவோம். அதுமட்டுமின்றி கிராமங்களில் புதிதாக சிறியளவிலான விளையாட்டு மைதானங்களை நிர்மாணிப்பதற்கு தேவையான அனைத்து வசதிகளையும் பெற்றுக் கொடுக்க நாம் நடவடிக்கை மேற்கொள்வோம்.

நல்ல ஆரோக்கியமான ஆயுட்காலம் கொண்டவர்களை இந்நாட்டில் உருவாக்குவதற்கோ நாம் அவ்வாறு செய்கின்றோம். பொறுமை, கட்டுப்பாடு, தன்னலமற்ற தன்மை மற்றும் சமூக உணர்வை கொண்ட ஒரு தலைமுறையை இந்நாட்டில் உருவாக்க வேண்டும். அதனால்தான் இந்த பணியை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். கணினி மற்றும் தொலைபேசிக்கு அடிமையாகும் ஒரு தன்மையிலிருந்து நம் நாட்டை விடுவிக்க வேண்டும்.

நமது நாட்டின் விளையாட்டுத்துறை அமைச்சர் ஒரு சிறந்த விளையாட்டு வீரர் என்பதை நான் இந்நாட்டின் பெற்றோருக்கு கூற வேண்டும். நான் அமைச்சராக இருந்தாலும், எதிர்க்கட்சி தலைவர், பிரதமர், ஜனாதிபதி என எப்பதவியில் இருந்தாலும் நாமல் விளையாட்டுக்களில் ஈடுபடும் போது நான் மைதானத்திற்கு பார்வையாளராக சென்றுள்ளேன். சிறு பராயம் முதல் அனைத்து போட்டிகளுக்கும் நான் சென்றுள்ளேன். 6-9 வயதிருக்கும்போது தான் தொடங்கினார். அன்று முதல் அனைத்து போட்டிகளையும் பார்வையிட சென்றுள்ளேன்.

ஏனெனில் மைதானத்தில் கிடைக்கும் அனுபவம் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும். தற்போது நாமல் றகர் மைதானத்தில் ஓடுவதைவிட விளையாட்டுத்துறை அமைச்சர் என்ற பதவியுடன் ஓடுகின்றார் என நான் நினைக்கின்றேன். பாடசாலை காலத்தில் விளையாட்டு போட்டிகளில் ஈடுபட்டதன் மூலமே அவருக்கு சேவையாற்றுவதற்கான பலம் கிடைத்துள்ளது என நாம் நம்புகின்றேன்.

இந்நாட்டின் அனைவரும் அதே கண்ணோட்டத்தில் விளையாட்டை நோக்க வேண்டும். இது தொடர்பில் உங்களதும், நாட்டினதும், தேசத்தினதும் கவனம் செலுத்தப்பட வேண்டும் என கௌரவ பிரதமர் தெரிவித்தார்.

அங்கு விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அவர்கள் உரையாற்றுகையில்,

அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் மற்றும் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஆகியோரது தலைமைத்துவத்தின் கீழ் சுபீட்சத்தின் எதிர்கால நோக்கு வேலைத்திட்டத்தை யதார்த்தமாக்கி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சு மற்றும் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார இராஜாங்க அமைச்சுடன் இணைந்த நாட்டின் கிராமப்புற விளையாட்டை மேம்படுத்த பாரிய வேலைத்திட்டமொன்றை நாம் செயற்படுத்துகின்றோம்.

அதன் ஒரு ஆரம்பமாக விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சு மற்றும் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார இராஜாங்க அமைச்சுடன் இணைந்து தேனுக விதானகமகே அவர்களின் பங்கேற்புடன் இலங்கையின் கிராமிய விளையாட்டு மைதானங்களை அபிவிருத்தி செய்யும் தேசிய வேலைத்திட்டத்தை நாம் இன்று ஆரம்பித்திருக்கிறோம்.

இலங்கை அரசியலில் மற்றும் இலங்கையின் விளையாட்டு வரலாற்றில் முதல் முறையாக கிராமப்புற விளையாட்டு மைதானங்களை அபிவிருத்தி செய்யும் தேசிய வேலைத்திட்டம் மாத்திரமன்றி நாட்டின் அரச தலைவரதும், பிரதமரதும் தலைமையில் கவனம் செலுத்தப்பட்டு, ஒருபுறம் தேசிய மற்றும் சர்வதேச வெற்றிகளை நோக்கி பயணிப்பது போன்றே மறுபுறத்தில் புதிய விளையாட்டு கலாசாரத்தை நாம் தோற்றுவிக்கின்றோம்.

விளையாட்டு கலாசாரத்தின் ஊடாக ஒழுக்கமான, ஆரோக்கியமான சமூகம் மற்றும் நாட்டில் ஒரு புதிய விளையாட்டு பொருளாதாரம் ஆகியவற்றை உருவாக்க தேவையான சூழலை உருவாக்குவோம் என்று நம்புகிறோம்.

அதற்கான அடித்தளமாகவே கிராமப்புற விளையாட்டு மற்றும் கிராமப்புற பாடசாலை விளையாட்டுகள் மேம்படுத்தப்படுகின்றன.  அதன்படி, தேனுக விதானகமகே அவர்களது தலைமையில், அவரது அமைச்சு மற்றும் நாட்டின் ஒவ்வொரு பிரதேச சபை, ஒவ்வொரு நகர சபைகளும், விளையாட்டுக் கழகங்கள் மற்றும் இளைஞர் கழகங்கள் என்பவற்றை ஒன்றிணைத்து கிராமப்புற விளையாட்டுகளை மேம்படுத்துவதற்காக நாம் ஆரம்பித்துள்ள வேலைத்திட்டம்  எதிர்காலத்தில் ஒரு புதிய விளையாட்டு கலாசாரத்தை உருவாக்கும்.

அதேபான்று கிராமப்புற விளையாட்டு மற்றும் கிராமப்புற பாடசாலை விளையாட்டுக்காக பாரிய வேலைத்திட்டமொன்iறு செயற்படுத்துவோம். இன்று இந்நாட்டில் விளையாட்டு கலாசாரமொன்று தோற்றம் பெற்று வரும் இக்காலப்பகுதியில் செயற்திறன் மிக்க சமூகமொன்றை உருவாக்குவதற்கு எம்முடன் இணைந்து இப்பயணத்தை தொடர எம்முடன் கைக்கோர்க்குமாறு அனைவருக்கும் அழைப்பு விடுப்பதாக கௌரவ விளையாட்டுத்துறை அமைச்சர் தெரிவித்தார்.

குறித்த நிகழ்வில் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, இராஜாங்க அமைச்சர் தேனுக விதானகமகே, விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் அனுராத விஜேகோன், பாராளுமன்ற உறுப்பினர்களான மதுர விதானகே உள்ளிட்ட அரச அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.