கொரோனா தொற்றின் ஆபத்தறிந்து மக்கள் வீதிகளுக்கு இறங்குவதை தவிர்த்துக்கொள்ளவும் : சுகாதார வைத்திய அதிகாரி வேண்டுகோள் !

(நூருல் ஹுதா உமர்)

நாட்டில் வேகமாக அரிகரித்துவரும் கொரோனாவின் ஆபத்தை அறிந்து மக்கள் ஒத்துழைப்பு வழங்க முன்வரவேண்டும். கடந்த காலங்களில் மக்கள் தந்த ஒத்துழைப்பினாலையே இந்த மூன்றாம் அலையில் சாய்ந்தமருது பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் நான்கு தொற்றாளர்கள் மட்டுமே அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். முன்னர் போன்றில்லாது மக்களின் அண்மைக்கால நடவடிக்கைகளில் சில அதிருப்தி நிலை காணப்படுகிறது என சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.எம்.அல் அமீன் றிசாட் தெரிவித்தார்.

இன்று (02) மாலை தனது அலுவலகத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்து பேசிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், இரவில் கூட எங்களினால் ரோந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜீ சுகுணன் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க நாங்கள் அர்ப்பணிப்புடன் மனித உயிர்களை காப்பாற்ற போராடிக் கொண்டிருக்கிறோம். கடந்த முதலாம், இரண்டாம் அலையை விட இந்த அலையில் இதுவரை பாதிப்பு குறைவாக இருந்தாலும் இனிவரும் காலங்களிலும் இந்த நிலை தொடரவேண்டும். அதற்காக மக்கள் தங்களின் பூரண ஒத்துழைப்பை வழங்க முன்வரவேண்டும்.

பொது சுகாதார பரிசோதகர்கள், சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக சுகாதார உத்தியோகத்தர்கள், கல்முனை பொலிஸார், பாதுகாப்பு படையினர் மற்றும் சாய்ந்தமருது பலநோக்கு அபிவிருத்தி செயலணி திணைக்களத்தின் பயிலுநர் குழுவும் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை தினமும் அர்ப்பணிப்புடன் செய்துவருகிறோம். கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜீ சுகுணன் அவர்களின் வழிகாட்டல்களுடன் நடமாடும் வியாபாரிகளை சுகாதார நடைமுறைகளை பேணி வியாபாரம் செய்ய கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்ட பின்னர் அனுமதி வழங்கப்படுறது. இறைச்சி வியாபாரத்திற்கும் கல்முனை மாநகர சபையுடன் கலந்துரையாடி ஒரு பொறிமுறையை உருவாக்கியுள்ளோம். மட்டுமின்றி விலைக்கட்டுப்பாடுகள் தொடர்பிலும் பொறிமுறையை உருவாக்க ஆலோசித்து வருகிறோம்.

ஆகவே மக்கள் வீணாக வீதிகளில் நடமாடி திரியாமல் வீடுகளில் இருந்து கொள்ளுமாறும் பெற்றோர்கள் தமது பிள்ளைகள் வீதிகளுக்கு இறங்குவது தொடர்பில் கரிசனையுடன் கூடிய அக்கறை செலுத்துமாறும் இதன்போது பொதுமக்களை அவர் கேட்டுக்கொண்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.