மருதனார்மடம் கொரோனா கொத்தணி: மேலும் எட்டுப் பேருக்குத் தொற்று!

யாழ்ப்பாணம் மருதனார்மடம் பொதுச் சந்தை கொரோனா வைரஸ் கொத்தணியில் மேலும் எட்டுப் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

மருதனார்மடம் பொதுச் சந்தை வியாபாரிகளுடன் நேரடித் தொடர்புடைய எட்டுப் பேருக்கே இவ்வாறு தொற்று உள்ளமை இன்று (19) உறுதிப்படுத்தப்பட்டதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இதன்படி, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துபீட ஆய்வுகூடத்தில் இன்று 110 பேரின் மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதில் ஆறு பேருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் 104 பேருக்குத் தொற்று இல்லையென அறிக்கை கிடைத்துள்ளது.

இதேவேளை, முல்லேரியா ஆய்வுகூடத்தில் பரிசோதனைக்கு உட்படுத்தியோரில் இருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம், அடையாளம் காணப்பட்டவர்களில் நல்லூர் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த ஐவர், உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த இருவர் மற்றும் சண்டிலிப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த ஒருவர் உள்ளடங்குவதாக வைத்தியர் கேதீஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

இதன்மூலம், மருதனார்மடம் கொரோனா கொத்தணியில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 85ஆக அதிகரித்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.