துரோகங்கள் எதிரிகளுக்குத் துணை நிற்கின்ற களத்தில் கூட்டமைப்பு வீறுநடை போடுகின்றது- ஜனநாயகப் போராளிகள் கட்சி

துரோகங்கள் எதிரிகளுக்குத் துணை நிற்கின்ற களத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வீறுநடை போடுகின்றது என ஜனநாயகப் போராளிகள் கட்சியின் செயலாளர் இ.இளங்கதிர் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியில் இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகள் மற்றும் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் பிரதிநிதிகள் இணைந்து நடத்திய ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் கூறுகையில், “யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் நடைபெறுகின்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த செயற்பாடாக கூட்டமைப்புடனான எமது இணைவு இருக்கின்றது.

ஏனெனில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு பிரதிநிதிகளும், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து போராடிய முன்னாள் போராளிகளும் ஒன்றிணைந்து தேர்தல்களத்தில் பணியாற்றுகின்றோம்.

உண்மையில் துரோகங்கள் சூழந்து நிற்க, அந்தத் துரோகங்கள் எதிரிகளுக்குத் துணை நிற்கும் இந்தக் களத்திற்குள்ளே தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலை நிமர்த்திக் கொண்டு தமிழர்களின் அபிலாசைகளை முன்னெடுப்பதற்காக இந்தப் பயணத்தை மேற்கொள்வது மிகமிக வரவேற்கத்தக்க விடயம்.

நாங்கள் எதிர்காலத்தைப் பற்றிச் சிந்திக்கின்றோம். எதிர்காலத்தில் எமது இனம் சார்ந்த உரிமை தொடர்பாக எவ்வாறு எங்களுடைய கட்டமைப்புகளைப் பலப்படுத்திக் கொள்ள முடியுமோ அந்தளவிற்கு நாங்கள் பலப்படுத்திக் கொள்ள வேண்டும்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழர்களின் மிகப் பெரும் சக்தியாக இந்த இலங்கை நாடாளுமன்றத்திலே செயற்பட வேண்டும். தமிழ் தேசியக் கூட்டமைப்பினூடாகத்தான் தமிழ் மக்களின் அரசியற் பலத்தை எமது தாயகத்தில் நாங்கள் நிறுவிக்கொள்ள முடியும்.

பல துரோகங்கள், பற்பல சவால்களுக்கு மத்தியிலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் தமிழ் மக்களின் உரிமைக்கான பாதையில் வீறுநடை போட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

அபிவிருத்தி என்ற மாயையை இங்கு கொண்டு வந்து எமது மக்களை உரிமை சார்ந்த விடயத்தில் இருந்து பிரித்தெடுப்பதற்காகப் பல சதித் திட்டங்களை பலர் தீட்டி வருகின்றார்கள்.

எமது மக்கள் ஒவ்வொரு போராளிகளையும் ஒவ்வொரு குடும்பத்தில் இருந்து எமது போராட்டத்திற்கு அனுப்பும் போது அவர்கள் வாழ்வாதாரத்தையோ, அபிவிருத்தியையோ, வேலைவாய்ப்பையோ எதிர்பார்த்து அனுப்பவில்லை. நிரந்தரமாக எமது மக்கள் இந்த மண்ணில் உரிமையோடு வாழ வேண்டும் என்பதற்காகவே தங்களின் பிள்ளைகளைப் போருக்கு அனுப்பினர்.

அந்த உணர்வு ரீதியான எமது மக்களை அபிவிருத்தியைக் காட்டி திசை திருப்பி தமிழ் தேசியத்தைச் சிதைக்கும் எண்ணம் கொண்ட மாற்று அணியினை முற்றுமுழுதாக நாங்கள் அழிக்க வேண்டும்.

எதிர்காலத்திலே தமிழர்களின் ஐக்கியம் என்பது தமிழ் தேசியக் கூட்டமைப்பினூடாகவே உருவாக்கப்பட வேண்டும். கூட்டமைப்புடனான எமது இணைவை பயங்கரவாதம் என்று முத்திரை குத்த முடியாது. ஏனெனில் உலகம் இதனை ஏற்கத் தயாரில்லை.

உலகம் இன்று எங்கள் பக்கம் நிற்கின்றது. நாங்கள் சரியான முறையில் எமது ஒற்றுமையை நிலைநிறுத்திக் காட்டுவோமாக இருந்தால் சர்வதேசம் எமக்கு ஆதராவாக தொடர்ந்து நிற்கும். நாங்கள் வெற்றி பெறுவோம்” என்று தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.