மேலும் 20 பேருக்கு கொரோனா தொற்று – மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 724 ஆக அதிகரிப்பு

இலங்கையில் மேலும் 20 பேருக்கு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதற்கமைய இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 724 ஆக அதிகரித்துள்ளது.

இறுதியாக கொரோனா தொற்றுக்குள்ளான 9 பேர் சவூதி அரேபியாவில் இருந்து நாடு திரும்பிய நிலையில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் என  அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஏனையவர்களில் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் இருந்து நாடு திரும்பிய இரண்டு பேரும் இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய 2 பேரும் உள்ளடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் கட்டாரில் இருந்து நாடு திரும்பி தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த 3 பேருக்கும் கந்தகாடு புனர்வாழ்வு முகாமில் தொற்று உயானவருடன் தொடர்பை பேணிய 4 பேருக்கும் நேற்று கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதாக அந்த திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மேலும் 12 பேர் நேற்றைய தினம் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர் என தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 35 ஆக உயர்வடைந்துள்ளது.

அதேநேரம் நோய்த் தொற்றுக்கு உள்ளான 678 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருவதுடன், அவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் கொரோனா தொற்று சந்தேகத்தில் நாடெங்கிலும் உள்ள வைத்தியசாலைகளில் 107 பேர் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர் என்பதுடன், இந்த தொற்று காணரமாக இலங்கையில் இதுவரையில் 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.