கொரோனா அகன்று போக வடக்கு, கிழக்கில் விசேட ஆராதனைகள்!
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று நோய் அகன்றுபோக யாழ். மறைமாவட்ட ஆயர் தலைமையில் விசேட ஆராதனை இடம்பெற்றது.
யாழ்ப்பாணம், திருகோணமலை, மன்னார், மட்டக்களப்பு ஆகிய நான்கு தமிழ் மறைமாவட்டங்கள் அடங்கிய வட கிழக்கு ஆயர் மன்றத்தினரால் நாட்டில் கொறோனாத் தொற்று நோய் அகன்று போக இன்று ஒவ்வொரு மாவட்டத்திலும் விசேட பூஜை ஆராதனைகள் நடைபெற்றன. அந்தவகையில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மரியன்னை தேவாலய சிற்றாலயத்தில் யாழ். மறைமாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசத்தின் பங்கு பற்றுதலோடு விசேட பூஜை ஆராதனை இடம்பெற்றது.
யாழ்ப்பாணம் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜெபரட்ணம் அடிகளாரின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்த விசேட பூஜை ஆராதனையின்போது, நாட்டில் கொரோனாத் தொற்று நீங்குவதற்குப் பிரார்த்திக்கப்பட்டது. தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் நலன் வேண்டியும் ஆயர் தலைமையில் விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
குறித்த விசேட பூஜையில் யாழ். மறை மாவட்டத்தைச் சேர்ந்த குருமார்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டார்கள்.
கருத்துக்களேதுமில்லை