சுவாமி விபுலானந்தரின் 132 ஆவது ஜனன தினம் மட்டக்களப்பில் அனுஸ்டிப்பு

வெளிநாட்டில் உள்ளவர்களை நம்பியிருந்தால் எமது நாடு வளம்பெறாது, தொழில்நுட்பம் சார்ந்து உழைக்க கற்றுக்கொண்டு சொந்தக்காலில் நிற்கவேண்டும் அதற்காக மாணவர்கள் பயிற்சியளிக்கப்பட வேண்டும் என்ற கருத்தினை சுவாமி விபுலானந்தர் வலியுறுத்திவந்துள்ளதாக மட்டக்களப்பு இராம கிருஸ்ணமிசனின் பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீல மாதவானந்தா ஜி மஹராஜ் தெரிவித்துள்ளார்.

உலகின் முதல் தமிழ் பேராசிரியர் என்ற பெருமையினைக்கொண்ட முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரின் 132 ஆவது ஜனன தினம் மட்டக்களப்பில் இன்று அனுஸ்டிக்கப்பட்டது.

சுவாமி விபுலானந்தர் நூற்றாண்டு விழா சபையினரின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு கல்லடியில் உள்ள சுவாமி விபுலானந்தரின் சமாதியில் இந்த நிகழ்வு நடைபெற்றது. இதன்போதே ஸ்ரீமத் சுவாமி நீல மாதவானந்தா ஜி மஹராஜ் மேற்கண்ட கருத்தினை குறிப்பிட்டிருந்தார்.

மட்டக்களப்பு இராம கிருஸ்ணமிசனின் பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீல மாதவானந்தா ஜி மஹராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சுவாமி விபுலாநந்தர் நூற்றாண்டு விழாச்சபையின் தலைவர் கே.பாஸ்கரன் மற்றும் சிவானந்தா தேசிய பாடசாலையின் அதிபர்,ஆசிரியர்கள்,மாணவர்கள்,விவேகானந்தா மகளிர் கல்லூரியின் ஆசிரியர்கள்,மாணவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.