இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய பேரவலத்தை நினைவுகூர வேண்டியது அனைவரதும் தார்மீகக் கடமை!

இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய பேரவலமான முள்ளிவாய்க்கால் இனப் படுகொலையை நினைவுகூர வேண்டியது தமிழர்களின் தார்மீகக் கடமையாகும் என தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ். சிவகரன் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் இன்று (சனிக்கிழமை) மாலை விடுத்துள்ள ஊடக அறிக்கையில்,

“இந்த நூற்றாண்டின் திட்டமிட்ட மிகப்பெரிய இனப்படுகொலையாகிய முள்ளிவாய்க்கால் பேரழிவு நினைவுகூரல் நிகழ்வை உலகம் முழுவதும் பரந்து வாழும் தமிழ் மக்கள் நினைவுகூர வேண்டியது தார்மீகக் கடமையாகும்.

11 ஆண்டுகள் ஆகிவிட்டபோதும் ஒரு இலட்சத்து 46 ஆயிரத்து 679 பேர் (146679) காணாமல் போனார்களோ அல்லது படுகொலை செய்யப்பட்டார்களோ என்பதற்கு இதுவரை முடிவில்லை.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டமும் பல வருடங்களைக் கடந்துள்ள நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட பல உறவினர்கள் இறந்து போயுள்ளனர். எத்தனையோ போராட்டங்கள் நடத்தியும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகம் வரை சென்றும் புலம்பெயர்ந்த தேசம் எங்கும் போராட்டங்கள் நடத்தியும் பயன் இன்றும் கிட்டவில்லை.

நல்லாட்சி அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பாலும் காணாமல் ஆக்கப்பட்வர்களுக்கு எந்த நீதியும் பெற்றுக் கொடுக்கக்கப்படவில்லை. பறனகம ஆணைக்குழு, காணாமல் போனோருக்கான அலுவலகம் எல்லாமே ஏமாற்று வித்தைகள் தான். இலங்கை அரசாங்கம், சர்வதேச சமூகம், தமிழ் தேசியக் கூட்டமைப்பு எல்லோரும் ஏமாற்றிவிட்டார்கள். எல்லாமே வெறுமையாக்கப்பட்டுள்ளன. அதனால், பலர் எதிர்காலத்தின் மீது நம்பிக்கையை இழந்து விட்டனர்.

இந்நிலையில், இனப் படுகொலை நடந்து 11 ஆண்டுகள் கடந்து விட்டன. மீள் வாழ்வு என்பது இன்னும் சவாலாகவே உள்ளது. வடக்கு கிழக்கில் 89 ஆயிரம் விதவைகள் அங்கவீனர்களின் வாழ்வாதாரம் இன்னும் கேள்விக் கூறியாகவே உள்ளது. கட்டமைக்கப்பட்ட எந்த முனைவுகளும் மேற்கொள்ளப்படவில்லை என்பது கவலைக்குரிய விடயமாகும்.

ஆகவே, விடுதலை எனும் உயரிய நோக்கோடு போராடிய இனம் எத்தகைய சவால்களுக்கும் முகம் கொடுத்தே நிமிர வேண்டும் என்பதே வரலாறு நமக்கு கற்றுத்தந்த பாடமாகும்.

கொரோனா பிரச்சினை தொடர்வதால் பொது அமைப்புகள், தனிநபர்கள் என அனைவரும் சிறிய அளவில் என்றாலும் நினைவுகூரலை முன்னெடுங்கள்!

இன்றைய சிறார்களுக்கு அரசின் இனப்படுகொலை பற்றி தெளிவூட்டுங்கள்! இதுதான் காலத்தின் கடமையும் தமிழர்களின் கட்டாயமும் ஆகும்” என குறித்த அறிக்கையின் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.