வவுனியாவில் மலசல கூடத்திற்கு வெட்டிய குழியில் விழுந்து சிறுமி பலி
வவுனியா, பன்றிக் கெய்தகுளம் பகுதியில் மலசல கூடத்திற்கு வெட்டிய குழியில் விழுந்து 6 வயது சிறுமி ஒருவர் மரணமடைந்துள்ளார்.
இன்று மதியம் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா, பன்றிக்கெய்தகுளம் பகுதியில் உள்ள வீடு ஒன்று மழை காரணமாக நீர் உட் சென்றதால் வீட்டு கூரைக்கு தேவையான மரங்கள் வெட்டுவதற்காக தாயும், தந்தையும் வெளியில் சென்ற நிலையில் மூன்று சிறுவர்கள் வீட்டில் இருந்துள்ளனர்.
இதன்போது வீட்டில் மலசல கூடத்திற்காக வெட்டப்பட்டிருந்த குழியில் நீர் நிரம்பி இருந்துள்ளது. விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களில் ஒருவரான 6 வயது சிறுமி வழுக்கி நீர் நிரம்பிய மலசல கூடத்திற்பாக வெட்டப்பட்ட குழியில் வீழ்ந்துள்ளார். இதனையடுத்து குறித்த சிறுமியை மீட்ட அயலவர்கள் வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதும் முன்னதாகவே சிறுமி உயிரிழந்துள்ளார்.
இதில், வவுனியா பன்றிக்கெய்த குளத்தைச் சேர்ந்த சத்தியசீலன் சஜீவினி (வயது 6) என்ற சிறுமியே மரணமடைந்தவராவர். சிறுமியின் மரணம் தொடர்பில் ஓமந்தைப் பொலிசார் மற்றும் திடீர் மரண விசாரணை அதிகாரி சிவநாதன் கிசோர் ஆகியோர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கருத்துக்களேதுமில்லை