கல்முனை மாநகர சபையின் பட்ஜெட் நிறைவேற்றம்…
கல்முனை மாநகர சபையின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் 09 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கல்முனை மாநகர சபையின் வரவு- செலவுத் திட்டத்திற்கான விசேட சபை அமர்வு பெரும் பரபரப்புக்கு மத்தியில் இன்று புதன்கிழமை (02) முற்பகல் 10.00 மணியளவில் மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் தலைமையில் ஆரம்பமாகி பிற்பகல் 12.30 மணியளவில் வாக்கெடுப்பு இடம்பெற்றது.
இந்த அமர்வுக்கு மாநகர சபையின் 41 உறுப்பினர்களில் 39 உறுப்பினர்கள் சமூகமளித்திருந்தனர். இவர்களில் 24 உறுப்பினர்கள் ஆதரவாகவும் 15 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்தனர்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் 12 உறுப்பினர்களும் ஆதரவாக வாக்களித்தனர். அத்துடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 05 உறுப்பினர்கள், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் 04 உறுப்பினர்கள், நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் ஒரு உறுப்பினர், ஹெலிகொப்டர் சுயேட்சைக்குழுவின் ஒரு உறுப்பினர் மற்றும் மான் சுயேட்சைக்குழு உறுப்பினர் ஒருவரும் ஆதரவாக வாக்களித்தனர்.
தமிழர் விடுதலைக் கூட்டணியின் 03 உறுப்பினர்களும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 02 உறுப்பினர்கள், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஒரு உறுப்பினர், தேசிய காங்கிரஸின் ஒரு உறுப்பினர் மற்றும் சாய்ந்தமருது சுயேட்சைக்குழுவின் 08 உறுப்பினர்கள் எதிராக வாக்களித்தனர்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு உறுப்பினர், சாய்ந்தமருது சுயேட்சைக்குழுவின் உறுப்பினர் ஒருவருமாக 02 பேர் சபைக்கு சமூகமளித்திருக்கவில்லை.
கருத்துக்களேதுமில்லை