தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்யக் கோரி மன்னாரில் பிரார்த்தனை வாரம்
தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்யக் கோரி மன்னாரில் பிரார்த்தனை வாரம் ஆரம்பபிக்கப்பட்டுள்ளதாக சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான நிறுவனம் தெரிவித்துள்ளது.
நேற்று (வியாழக்கிழமை) ஆரம்பமாகிய குறித்த பிரார்த்தனை வாரம் எதிர்வரும் 14 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்யக் கோரி சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் அதன் குழுமத் தலைவர் ஜே.ஜாட்சன் பிகிராடோ தலைமையில் தமிழ் அரசியல் கைதிகளின் குடும்பத்தினர், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் இலங்கையின் வடக்கு கிழக்கு வாழ் பொது மக்கள் இணைந்து பிராத்தனை வாரம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர்.
இந்நிலையில் இவ்விடயம் தொடர்பாக மன்னாரில் நேற்று (வியாழக்கிழமை) மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது ஜே.ஜாட்சன் பிகிராடோ மேலும் கூறியுள்ளதாவது, “தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி அனைத்து மக்களும் இணைந்து குரல் கொடுத்து வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக கடந்த 5 ஆம் திகதி வடக்கு கிழக்கிலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் அரசியல் கைதிகளின் விடுதலையை வேண்டி கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.
அதன் இன்னும் ஓர் வடிவமாக மக்கள் முன்னெடுத்து வருகின்ற தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை வேண்டிய பிரார்த்தனை வாரத்தினை எதிர்வரும் 14 ஆம் திகதி வரையிலான ஒரு வாரம் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வேண்டி பிரார்த்தனை செய்யும் வாரமாக நாங்கள் அனுஷ்டித்து வருகின்றோம்.
மேலும், பொது இடம் மற்றும் இறை பிரார்த்தனை இடம் பெரும் இடங்களில் மஞ்சல் மற்றும் கருப்பு நிற தோரணங்களை பறக்க விட்டு அரசியல் கைதிகளின் விடுதலைக்காக பிராத்தனைகளை மேற்கொள்வோம்.
மக்களுடன் இணைந்து நாங்கள் இந்த வாரத்தில் அமைதியான முறையில் தமது கிராமங்களில் பொது இடங்களில் ஒன்று கூடி இறை பிரார்த்தனைகளில் ஈடுபட வேண்டும். நாங்களும் அவர்களுடன் இணைந்து கொள்ளுகின்றோம்.
இந்த நாட்டின் ஜனாதிபதி தமிழ் அரசியல் கைதிகளான சுமார் 147 ற்கும் மேற்பட்டவர்களை பொங்கல் பரிசாக அவர்களின் குடும்பங்களுடன் இணைக்க வேண்டும்” என அவர் கோரியுள்ளார்.
கருத்துக்களேதுமில்லை