சீனத் தூதுவரின் கல்முனை விஜயத்திற்கு பிரதி முதல்வர் ரஹ்மத் மன்சூர் நன்றி தெரிவிப்பு

(அஸ்லம் எஸ்.மௌலானா)

சீனத் தூதுவரின் கல்முனை விஜயத்திற்கும் அவரது நிவாரண உதவிகளுக்காகவும் எதிர்காலத்தில் கல்முனைக்கு உதவ விருப்பம் வெளியிட்டுள்ளமைக்காகவும் கல்முனை மாநகர பிரதி முதல்வர் ரஹ்மத் மன்சூர் நன்றி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மேலும் கூறியிருப்பதாவது;

சீன மக்கள் குடியரசு தூதரகத்தின் ஏற்பாட்டில் கல்முனைப் பிராந்தியத்திலுள்ள வசதி குறைந்த குடும்பங்களுக்கான உலருணவுப் பொதிகள் மற்றும் உதைப்பாந்தாட்ட கழகங்களுக்கான விளையாட்டு பொருட்களை வழங்கி வைக்கும் நிகழ்வு வியாழக்கிழமை கல்முனை ஆஷாத் பிளாஸா மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றிருந்தது.

Sports First Foundation ஏற்பாட்டில் அதன் இணைத் தவிசாளர் ஏ.ஜி.எம்.அன்வர் நௌசாத் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இலங்கைக்கான சீனத் தூதுவர் மேண்மைதங்கிய ஷீ ஜன்ஹொங் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு குறித்த பொருட்களை தனது பொற்கரங்களினால் பயனாளிகளுக்கு வழங்கி வைத்திருந்தார்.

தூதுவருடன் அவரது பாரியார் ஜின் ஜியாங் அவர்களும் வருகைதந்து சிறப்பித்திருந்ததுடன் எமது கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்களும் அதிதியாக கலந்து கொண்டு விசேட உரை நிகழ்த்தியிருந்தார்.

அத்துடன் கல்முனை மாநகர மக்கள் சார்பில் சீனத் தூதுவரை முதல்வர் தலைமையில் பிரதி முதல்வராகிய நான் உட்பட மாநகர சபை உறுப்பினர்களும் இணைந்து பொன்னாடை போர்த்தி, நினைவுச் சின்னம் வழங்கி கெளரவித்தோம்.

இந்நிகழ்வில் முதல்வர் றகீப் அவர்கள் தனதுரையின்போதும் தூதுவருடன் நட்பு ரீதியாக உரையாடிய வேளையிலும் கல்முனை மாநகரின் முக்கிய தேவைகள் குறித்து எடுத்துரைத்து, அவற்றுக்காக சீனா உதவ முன்வர வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார். இதற்கு சீனத் தூதுவரும் சாதகமாக பதிலளித்திருந்தமை எமக்கு மகிழ்ச்சியளிக்கின்றது.

எனவே, சீனத் தூதுவரின் கல்முனை விஜயத்திற்கும் நிவாரண உதவிகளுக்காகவும் கல்முனையின் தேவைகளை எதிர்காலத்தில் நிறைவேற்ற விருப்பம் வெளியிட்டமைக்காகவும் மேண்மைதங்கிய தூதுவர் அவர்களுக்கு கல்முனை மாநகர மக்கள் சார்பில் நன்றியும் பாராட்டும் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றேன்- என்று குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.