எம்.பி பதவியை இராஜினாமா செய்து சாய்ந்தமருது ஏ.எல்எம்.சலீமுக்கு வழங்குங்கள் : தே.கா. தலைவர் அதாஉல்லாவிடம் பகிரங்க வேண்டுகோள்

எம்.பி பதவியை இராஜினாமா செய்து சாய்ந்தமருது ஏ.எல்எம்.சலீமுக்கு வழங்குங்கள் : தே.கா. தலைவர் அதாஉல்லாவிடம் பகிரங்க வேண்டுகோள்

மாளிகைக்காடு நிருபர்

தேசிய காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாவுல்லா தனது பாராளுமன்ற உறுப்புரிமையை உடனடியாக இராஜினாமா செய்து, அதனை சாய்ந்தமருது சார்பில் கடந்த பொதுத்தேர்தலில் தேசிய காங்கிரஸ் வேட்பாளராக களமிறங்கியிருந்த சிரேஷ்ட நிர்வாக சேவை அதிகாரி ஏ.எல்.எம். சலீமுக்கு வழங்க வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதிப் பொருளாளர் ஏ.சி.யஹியாகான் பகிரங்கமாக வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது ,

சாய்ந்தமருது நகர சபை கோஷம் என்பது இனிமேல் முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாவுல்லாவால் முடியாத விடயம் என்பதை சாய்ந்தமருது மக்கள் நன்கு அறிந்து விட்டனர். நகர சபை என்ற கோஷத்தை கொண்டு இனியும் சாய்ந்தமருது மக்களை ஏமாற்றவும் முடியாது ; அரசியல் செய்யவும் முடியாது. அது யாராக இருந்தாலும் சரியே.

நகர சபை கோஷத்தை வைத்து நன்கு சாய்ந்தமருது மக்களை ஏமாற்றி பல ஆயிரக்கணக்கான வாக்குகளை பெற்ற முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாவுல்லா பாராளுமன்ற உறுப்பினரானார். ஏமாற்றமான வர்த்தமானி வெளியிட்டு அம் மக்களை ஏமாற்றினார். இனியும் அவரால் ஏமாற்றவே முடியாது. சாய்ந்தமருது மக்கள் மிகத் தெளிவாக உள்ளனர்.

சாய்ந்தமருது மக்களின் வாக்குகளால் பாராளுமன்றம் சென்ற முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாவுல்லா நகர சபையை பெற்றுத்தர முடியாத இன்றைய சூழ்நிலையில் தமது எம்பி பதவியை இராஜினாமா செய்து  சாய்ந்தமருது பிரதேசத்தை சேர்ந்த சிரேஷ்ட நிர்வாக சேவை அதிகாரி ஏ.எல்.எம். சலீமுக்கு அந்த பதவியை வழங்க முன்வர வேண்டும். இன்னும் சிறு காலத்துக்கு இருக்கப்போகும் இந்த பாராளுமன்ற காலத்துக்காகவாவது அந்த எம்பி பதவியை வழங்கி தனது நன்றி உணர்வை வெளிப்படுத்த பாராளுமன்ற உறுப்பினரும், தேசிய காங்கிரசின் தலைவருமான ஏ.எல்.எம். அதாவுல்லா முன்வர வேண்டும் என்றும் ஏ.சி.யஹியாகான் கேட்டுக்கொண்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.