மதுபான நிலையங்களை 10 மணிவரை திறக்க வேண்டும்..! அரசாங்கத்திடம் கோரிக்கை
மதுபான நிலையங்களை இரவு 10 மணிவரை திறந்து வைக்க வேண்டும் என சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயனா கமகே அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மற்றும், பல்பொருள் அங்காடிகளுக்கு பியர் விற்பனை உரிமம் வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வில் அரச வருவாய் அதிகரிப்பு தொடர்பான ஒத்திவைப்பு விவாதத்தின்போதே, அவர் இந்த விடயத்தினை தெரிவித்தார்.
கஞ்சா வீதியில் பாவித்து சுற்றித்திரியும் போதைப்பொருளல்ல
தொடர்ந்து கருத்துரைத்த அவர், ” நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு மனோபாவத்தில் மாற்றம் அவசியம். கஞ்சா என்பது வெறுமனே வீதியில் பாவித்து சுற்றித்திரியும் போதைப்பொருளல்ல.
நான் அந்நியச் செலாவணியைப் பற்றி பேசுகிறேன். சில வித்தியாசமான விஷயங்களைப் பற்றி அதன் மறுபக்கத்தைப் பற்றி பேசுகிறேன்.
கஞ்சா செடியை வளர்க்க சட்டம் தேவையில்லை, கஞ்சா 6000 ஆண்டுகளுக்கு முந்தைய கலாசார பின்னணியை கொண்டது. அது 2500 வருட வரலாற்றை கொண்டது. அது ராவணன் காலத்திலிருந்தே இருந்தது.
இரவு வாழ்க்கை என்பது விபசாரமல்ல
இன்று புத்தபெருமான் இங்கு வந்திருந்தால் கூட இந்நாட்டைப் பற்றி என்ன சொல்லியிருப்பார் என்று தெரியவில்லை. நான் “இரவு வாழ்க்கை” பற்றி பேசினேன். “இரவு வாழ்க்கை” என்பது விபசாரமல்ல. அதையும் தாண்டி சில விடயங்கள் உள்ளன.
இரவு நேரங்களில் குழந்தைகளை மகிழ்விக்கக்கூடிய நிறைய விடயங்கள் உள்ளது. அதில் ஒன்றுகூட நம் நாட்டில் இல்லை. எல்லாமே மறைமுகமாகவும் ரகசியமாகவும் நடக்கிறது.
இந்த நாட்டில் எது ஒழுக்கம்? பெண்ணை இழிவுபடுத்துவது ஒழுக்கமா? இரவு ஒன்பது மணிக்கு மேல் மதுபானசாலைகளை மூடும் போது, அரசுக்கு வரி செலுத்தாமல் பின்வாசல் வழியாக மது விற்பனை செய்கின்றனர் “, எனக் குறிப்பிட்டார்.
கருத்துக்களேதுமில்லை