பொருளாதார நெருக்கடிக்கு கூட்டமைப்பு மீது குற்றச்சாட்டு
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தமிழ்த் தேசியகூட்டமைப்பும் காரணம் என குற்றஞ்சாட்டிய முன்னாள் அமைச்சரும் அரச தரப்பு எம். பி.யுமான மஹிந்தானந்த அளுத்கமகே, கடந்த காலங்களில் வரவு செலவுத் திட்டங்களில் கடன் பெற்று நாட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்கியதாலும் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கவை விமர்சித்துக் கொண்டிப்பதை விடுத்து பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண 225 நாடாளுமன்ற உறுப்பினர்களும் கொள்கை அடிப்படையில் ஒன்றிணைய வேண்டும்.
2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் நாட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்கப்படவில்லை என குற்றஞ்சாட்டப்படுகிறது. கடந்த காலங்களில் வரவு செலவுத் திட்டங்களில் கடன் பெற்று நாட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்கியதால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
கூட்டமைப்பும் பொறுப்பு கூறவேண்டும்
சுதந்திரத்தின் பின்னரான காலப்பகுதியில் ஆட்சியில் இருந்த சகல அரசாங்கங்களும் பொருளாதார பாதிப்புக்கு பொறுப்புக்கூற வேண்டும். பொருளாதார பாதிப்புக்கும் தமக்கும் எவ்வித தொடர்பு இல்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பினரும்,மக்கள் விடுதலை முன்னணியினரும் குறிப்பிட முடியாது,ஏனெனில் இவர்கள் அரசாங்கத்தில் அமைச்சு பதவிகளை வகிக்காவிட்டாலும்,அரசாங்கங்களின் பங்குதாரர்களாக இருந்துள்ளார்கள்.
புதிய அரசாங்கம் வந்தவுடன் டொலர் பற்றாக்குறை தீருமா
நாட்டில் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்துள்ள நிலையில் எதிர் தரப்பினர் தேர்தலை நடத்துமாறு கோருகிறார்கள்.தேர்தலை நடத்தி புதிய அரசாங்கம் வந்தவுடன் நாட்டில் டொலர் பற்றாக்குறைக்கு தீர்வு காண முடியுமா?
தேர்தலை நடத்திய பின்னர் நாட்டுக்கு தடையின்றி டொலர் வருமாக இருந்தால் நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத்தேர்தலை நடத்த முழு ஒத்துழைப்பு வழங்க நாம் தயார் என்றார்.
கருத்துக்களேதுமில்லை