சிறுமியின் கை அகற்றப்பட்ட சம்பவத்துக்கு சத்தியமூர்த்தியே பொறுப்புக்கூற வேண்டும்! வைகிறார் முன்னாள் திடீர் மரண விசாரணை அதிகாரி

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 8 வயது சிறுமியினது கையின் ஒரு பகுதி அகற்றப்பட்டமை தொடர்பில் சம்பந்தப்பட்ட அனைவரையும் பொதுவெளியில் பகிரங்கப்படுத்த வேண்டும் என்பதுடன் இதற்கு வைத்தியசாலை பணிப்பாளர், வைத்தியர் சத்திய மூர்த்தியே பொறுப்பேற்க வேண்டும் எனவும் யாழ். போதனா வைத்தியசாலையின் முன்னாள் திடீர் மரண விசாரணை அதிகாரி முத்துக்குமாரு உதயஸ்ரீP தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் அவர் நடத்திய  ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில் –

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 8 வயது சிறுமி ஒருவரின் கை உரிய முறையில் சிகிச்சை மேற்கொள்ளப்படாமையால் அகற்றப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் மிகுந்த மன வேதனையையும் கடும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சிறுமி படிப்பிலும் விளையாட்டிலும் திறமையானவராக விளங்கியதுடன் பரதநாட்டியத்திலும் திறமை உள்ளவராகக் காணப்பட்டார்.

இந்த சிறுமியின் கை அகற்றப்பட்டமையால் அவரின் எதிர்காலம் பாதிக்கப்பட்டுள்ளதோடு, குறித்த சிறுமி வாழ்க்கை பூராகவும் பாரிய துன்பத்துக்கு ஆளாகவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். இதற்கு முழு காரணமான சம்பந்தப்பட்ட தாதியர்கள், வைத்தியர்கள், வைத்திய நிபுணர்கள் அனைவரும் தண்டிக்கப்படவேண்டும்.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவர்களின் பெயர் விவரங்கள் பகிரங்கப்படுத்தப்பட வேண்டும். இவ்வாறு செய்தால்தான் இனிமேலும் இத்தகைய தவறுகள் நிகழாமல் இருக்கும்.

இச்சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராக இருக்கும் வைத்தியர் சத்தியமூர்த்தி வடக்கு மாகாண சுகாதார சேவைகளின் பணிப்பாளராகவும் விளங்குகிறார்.

இவர் ஒரே நேரத்தில் இரண்டு குதிரைகளில் சவாரி செய்ய விரும்புகிறார். ஒரு போதனா வைத்தியசாலையில் நிகழ்ந்த இந்த சம்பவத்துக்கு பொறுப்புக்கூற வேண்டியவர் இவரே. மாகாணத்தில் ஒரு தவறு நடந்தாலும் அதற்கும் மாகாண ரீதியில் பொறுப்புக்கூற வேண்டியவர் சத்தியமூர்த்தியே ஆவார்.

ஆனால், அண்மைக்காலங்களாக வடக்கு மாகாணத்தில் குறிப்பாக யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவில் காணப்படும் அரச வைத்தியசாலைகளில் நடக்கும் தவறுகள் தொடர்பில் பல்வேறு தரப்பினரும் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

அண்மையில் கிளிநொச்சியில் பெண் ஒருவரின் கர்ப்பப்பை அகற்றப்பட்டமை தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர் சத்தியமூர்த்தியின் கவனத்துக்கு கொண்டு வந்தபோது, அது தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படும் என அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், அவர் இந்த சம்பவம் தொடர்பில் வைத்தியர்களை நியாயப்படுத்தும் வகையில் அண்மையில் ஊடகங்களுக்கு கருத்துக்களையும் தெரிவித்திருந்தார். இவ்வாறானதொரு நிலையில் மக்கள் இவரிடம் எவ்வாறு நியாயத்தைப் பெற்றுக்கொள்ளமுடியும்.

அரச நிறுவனம் ஒன்றில் தொடர்ச்சியாக ஒருவர் பணியாற்ற முடியாது. ஆனால், இவர் தற்போது தொடர்ச்சியாக யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராகக் கடமையாற்றி வருகிறார்.

இவருடைய காலத்திலேயே அதிகளவிலான முறைப்பாடுகள் பொதுமக்களிடமிருந்து கிடைக்கப்பெற்றுள்ளன. மாகாணத்திலும் மாவட்டத்திலும் தகுதியான பல வைத்தியர்கள் இருக்கின்றபோதும் தொடர்ச்சியாக இவர் இந்த பதவியில் இருந்து வருகிறார். இதனால் ஏனையோர் தகுதி இருந்தும் இந்த பதவிக்கு வரமுடியாத நிலை காணப்படுகிறது. – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.