ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப விரைவில் ஏற்பாடு! அரவிந்தகுமார் தகவல்

 

நாட்டில் தற்போது நிலவும் ஆசிரிய வெற்றிடங்களை நிரப்புவதற்கு விரைவான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பட்டதாரிகளுக்கு ஆசிரிய நியமனங்களை வழங்கும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அத்துடன் அதிபர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக அதிபர்களுக்கான போட்டிப் பரீட்சை அடுத்த வருடம் ஜூன் மாதத்தில் நடத்தப்படும் என கல்வி இராஜாங்க அமைச்சர் அ.அரவிந்தகுமார் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் குமாரசிறி ரத்நாயக்க எம்.பி. எழுப்பிய கேள்விக்குப் பதில் அளிக்கும் போதே கல்வி இராஜாங்க அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து தெரிவிக்கையில் –

நாட்டில் தேசிய பாடசாலைகள் 396, மாகாண பாடசாலைகள் 9, 915, அந்த வகையில் மொத்தமான பாடசாலைகளின் எண்ணிக்கை 10,311 ஆகும்.

வடக்கில் செயலிழந்துள்ள பாடசாலைகள் 109. இவை மாகாண பாடசாலைகளுக்குள் உள்ளடங்குகின்றன.

தரப்படுத்தலுக்கு உட்பட்ட அதிபர்கள் உள்ள பாடசாலைகளில் தேசிய பாடசாலைகள் 309. மாகாண பாடசாலைகள் 6328 காணப்படுகின்றன. மொத்தம் 6627 பாடசாலைகள் உள்ளன.

அத்துடன் பதில் அதிபர்கள் கடமை புரியும் பாடசாலைகளில் தேசிய பாடசாலைகள் 87. மாகாண பாடசாலைகள் 3478. மொத்தமாக 3565 பாடசாலைகள் காணப்படுகின்றன.

அத்துடன் பதில் அதிபர்கள் கடமையாற்றும் பாடசாலைகள் மேல் மாகாணத்தில் 235 காணப்படுகின்றன. மத்திய மாகாணத்தில் 564. சப்ரகமுவ மாகாணத்தில் 505. வடமேல் மாகாணத்தில் 414. ஊவா மாகாணத்தில் 364. வடமத்திய மாகாணத்தில் 355. தென்மாகனத்தில் 326. கிழக்கு மாகாணத்தில் 449. வட மாகாணத்தில் 269. அந்த வகையில் மொத்தமாக 3565 பாடசாலைகள் இவ்வாறு காணப்படுகின்றன.

2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட பரீட்சைகளுக்கு இணங்க இலங்கை அதிபர் சேவை தரம் 3 இற்கான நியமனங்களின் பின்னர் அது தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளோம்.

அது தொடர்பில் தற்போது தொழிற்சங்கங்களுடன் பேச்சு நடத்தப்பட்டு இணக்கப்பாடு காணப்பட்டுள்ளது.

அதேபோன்று கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த மலையக பெருந்தோட்ட பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார்.

அததுடன் இலங்கை அதிபர் சேவையின் மூன்றாம் தரத்தில் நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதற்காக 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் அதிபர் சேவை மூன்றாம் தரத்திற்கு ஆள்களை சேர்த்துக் கொள்வதற்கான போட்டிப் பரீட்சையை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. – என்றார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.