மக்கள் நடமாடும் இடங்களில் கிருமி தொற்றகற்றும் நடவடிக்கை
பொது மக்கள் நடமாடும் இடங்களில் மேலும் கிருமி தொற்றகற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதியின் ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புறக்கோட்டை மத்திய பேருந்து தரிப்பிடம், கோட்டை மற்றும் மருதானை ரயில் நிலையங்கள், குணசிங்கபுர தனியார் பேருந்து தரிப்பிடம், கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம் மற்றும் கங்காராம விகாரை ஆகிய இடங்களில் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) கிருமி தொற்றகற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
ஜனாதிபதி அலுவலக பணிப்பாளர் நாயகம் (நிர்வாகம்) ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கே.பி எகொடவெலே மற்றும் பதில் பொலிஸ் மா அதிபர் சீ.விக்ரமரத்ன ஆகியோரின் பணிப்புரையின் பேரில் மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் இந்நிகழ்ச்சித்திட்டத்தை நெறிப்படுத்தினார்.
வேகமாக தண்ணீரை பீய்ச்சும் இயந்திரங்களை பயன்படுத்தி சுத்திகரிக்கப்பட்டதன் பின்னர் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சித்திட்டமும் கொரோனா தொற்று நிலைமை நீங்கும் வரை நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துக்களேதுமில்லை