இரவு, பகலாக பாடுபடும் ஊழியர்களுக்கு மேலதிக கொடுப்பனவை வழங்கக் கோரிக்கை!

கொரோனா வைரஸை தடுப்பதற்காக இரவு பகலாக பாடுபடும் மாநகரசபை, நகரசபை பிரிவில் கடமையாற்றும் ஊழியர்களுக்கு மேலதிக கொடுப்பனவுகளை கொடுக்க அரசாங்கம் முன்வர வேண்டும் என அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் தலைவர் எஸ்.லோகநாதன் தெரிவித்துள்ளார்.

கல்முனையில் இன்று (திங்கட்கிழமை) மதியம் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் கூறுகையில், “பேராபத்தினை ஏற்படுத்திவரும் கொரோனா தாக்கத்தில் இருந்து மக்கள் விரைவில் குணமடைய, அது சம்பந்தமான விடயங்களை நாங்கள் தெளிவுபடுத்த விரும்புகின்றோம். வடக்கு மாகாணத்தில் இருக்கின்ற மாநகரசபை, நகரசபை, பிரதேச சபைகளில் கடமையாற்றுகின்ற பொது சுகாதார ஊழியர்கள், சிற்றூழியர்களது அபார உழைப்பு பாராட்டத்தக்கது.

உலகில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் கொரோனா நோய் காரணமாக எட்டு மணித்தியாலங்கள் கடமைக்கு மேலதிகமாக மாநகரசபை, நகரசபைப் பிரிவில் கடமையாற்றும் ஊழியர்கள், தொழிலாளர்களுக்கு மேலதிக கொடுப்பனவுகளைக் கொடுக்க அரசாங்கம் முன்வர வேண்டும் என வலியுறுத்துகிறோம். உள்ளூராட்சி அமைச்சு மாநகரசபை ஊழியர்கள் தொடர்பாக விசேட கவனம் செலுத்த வேண்டும்.

இந்த சூழ்நிலையில் வடக்கு கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களில் சதோச நிறுவனங்களில் பணியாற்றிய தொழிலாளர்கள் பணியிழந்து பாதிக்கப்பட்டுள்ளனர்.

சிறுபான்மை மக்களின் பகுதிகளில் பூட்டப்பட்ட சதோச நியாயவிலைக் கடைகளை அந்த மக்களின் நிலையை கருத்திற்கொண்டு அரசாங்கம் மீண்டும் திறக்க கடற்றொழில் நீரியல் வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் எமது தொழிற்சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்தக் கோரிக்கையை பரிசீலிக்கவுள்ளதாக அமைச்சர் எம்மிடம் தெரிவித்தார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள அவசரகாலச் சூழ்நிலையில், இராணுவத்தினர், பொது சுகாதாரத் திணைக்களம், மாநகரசபை, நகரசபை, பிரதேசசபை ஊழியர்கள் தங்களது அயராத முயற்சியினால் பணியினை மக்களுக்காகக் மேற்கொண்டுவருவதை நாங்கள் எமது சங்கத்தின் ஊடாக பாராட்டுகின்றோம்” என்று கூறினார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.