தமிழரின் பாரம்பரிய வாழ்க்கை முறையே கொரோனா வைரசை முறியடிக்க ஒரே வழி- சி.வி.

தமிழரின் பாரம்பரிய வாழ்க்கை முறையே கொரோனா வைரசை முறியடிக்க ஒரே வழி என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வாராந்தம் ஒரு கேள்விக்கான பதிலில், கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவது குறித்து தமிழர்களுடன் தொடர்புபடுத்தி மக்களுக்கான அறிவுறுத்தலை வழங்கவேண்டும் என சி.வி.விக்கேஸ்வரனிடம் கேட்கப்பட்டது.

இதற்குப் பதிலளித்த அவர், “தமிழரின் பாரம்பரிய வாழ்க்கை முறையே கொரோனா வைரசை முறியடிக்க ஒரே வழி என்பதே எனது கருத்து.

1. அந்த நாட்களில் காலை எழுந்து வீட்டைப் பெருக்கி மஞ்சள் நீர் வீட்டிற்குத் தெளிப்பார்கள். சாணத்தால் முன் வாசலைப் பூசி மொழுகுவார்கள். பின்னர் எம் பெண்கள் கோலம் போடுவர். வாசலில் ஒரு வாளியில் மஞ்சள் நீர் கலந்துவைத்து பக்கத்தில் ஒரு பாத்திரத்தை வைப்பார்கள். வெளியிலிருந்து வருகின்றவர்கள் அனைவரும் செருப்பை வெளியில் வைத்துவிட்டு கை, கால் அலம்பிய பின்னரே உள்நுழைவார்கள்.

2. அடுத்து எம் பெண்கள் மஞ்சள் பூசி குளித்த பின் தலைவாரி, பூச்சூடி, வீபூதி பூசி, நெற்றிக்கு குங்குமம், சந்தனம் வைப்பார்கள். ஆண்களும் குளித்த பின்னர் விபூதி பூசி சந்தனம் வைப்பார்கள். சிலர் குங்குமம் வைப்பார்கள். இவற்றுள் சாணம், மஞ்சள், விபூதி, சந்தனம், குங்குமம் போன்றவை யாவுமே கிருமிநாசினிகள்.

3. காலையில் கொத்தமல்லி அல்லது சுக்கு (வேர்க்கம்பு அல்லது காய்ந்த இஞ்சி) கலந்த கோப்பியையே உட்கொள்வார்கள்.

4. மரண வீடுகளுக்குச் சென்று வருவோர் வீட்டினுள் அனுமதிக்கப்படமாட்டார்கள். கட்டியிருக்கும் உடை அத்தனையையும் களைந்து கழுவப் போட்டு, தலையில் குளித்த பின்னர் புது உடைகள் உடுத்தே உள்ளே வர வேண்டும். வைத்தியசாலைகளுக்குப் போய்வருவோரும் முற்றாகக் கை கால் அலம்பிய பின்னரே வீட்டினுள் நுழையலாம். குளித்த பின் வாழையிலையில் உணவு உட்கொள்வார்கள். வாழையில் ஓளஷத குணங்கள் உண்டு.

5. ஒவ்வொரு நாளும் காலையும் மாலையும் அவசியம் சாம்பிராணி பிடிப்பார்கள். அல்லது சந்தனத் திரிகளைக் கொழுத்துவார்கள்.

6. எவரையும் முதன் முதலில் அன்றைய தினம் சந்தித்தால் கை கூப்பியே வணக்கம் தெரிவிப்பார்கள். கைலாகு கொடுத்து வைரசுகளை விலை கொடுத்து வாங்கமாட்டார்கள். சுத்தம் சுகந் தரும் என்பது எமது பண்பாட்டில் ஊறிய ஒரு கருத்து.

7. வீட்டில் துளசி, வேம்பு, கற்பூரவள்ளி, திருநீற்றுப் பச்சை போன்ற மரங்களை தவறாது வளர்ப்பார்கள். கொத்தமல்லி இலையை உணவுடன் பல முறை கிழமைக்குக் கிழமை சேர்த்துக் கொள்வார்கள்.

8. காய்ச்சல், தடிமன், மூச்சடைப்பு, தலையிடி என்று வந்தால் மூலிகைகளினால் ஆன கசாயத்தையே மூன்று நாட்கள் உட்கொள்வார்கள். நோய் போய்விடும். எனக்கு நினைவிருக்கும் வரையில் கொத்தமல்லி, இஞ்சி, பற்படாகம், திப்பிலி, சிற்றரத்தை, மிளகு, அதிமதுரம், கற்பூரவள்ளி, மரமஞ்சள், கறுவா என்று பல மூலிகைகள் வெவ்வேறு தருணங்களில் பாவிக்கப்பட்டன.

9. தும்மல், இருமல் வந்தால் கிருமிகள் பரவாதிருக்க சால்வையால் அல்லது புடவை நுனியால் முகத்தை மூடி தும்முவதற்குப் பாவிப்பார்கள்.

10. அக்காலத்தில் மனிதர்கள் மிக அருகில் அமர்ந்திருக்கமாட்டார்கள். சற்று இடைவெளிவிட்டே அமர்ந்திருப்பார்கள். ஆண்களும் பெண்களும் வெவ்வேறாக வீட்டினுள் இருப்பார்கள்.

11. வெளியாட்கள் வீட்டுக்கு வந்து போன பின்னர் (பொதுவாக தூர இடங்களில் இருந்து வந்து போனபின்) வீட்டை உடனே நீர் கொண்டு அவர்கள் இருந்துவிட்டுப் போன இடங்களை வீட்டார் கழுவுவர். சாம்பிராணி பிடிப்பார்கள்.

இவற்றையெல்லாம் எம் முன்னோர்கள் செய்துவந்து பாதி வழியில் நிறுத்திவிட்டார்கள். பொதுவாக டெற்றோலை (Detol) பாவிக்கத் தொடங்கினார்கள். இனியாவது எமது பாரம்பரிய தமிழர் வாழ்வு முறையை நாங்கள் பின்பற்றவேண்டும்.

தமிழர் வாழ்க்கை முறை ஒரு மதமல்ல. அது விஞ்ஞான ரீதியாக சுகாதாரமாக, சுத்தமாக வாழும் முறையாகும். எம்மைக் கிருமிகள் அண்டவிடாமல் செய்ய எமது ஆதி அறிஞர்கள் வகுத்த எளிமையான வழிமுறையே எமது பாரம்பரிய வாழ்க்கைமுறை.

கொரோனா வராதிருக்கவும் எமது வாழ்க்கை முறை துணைபுரியும். எனினும் மனித குலத்துக்கு இன்று பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்திருக்கும் கோவிட்-19 என்றழைக்கப்படும் கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து எங்களையும், எங்கள் உறவினரையும், சுற்றத்தாரையும் முழு சமூகத்தையும் பாதுகாக்கும் மிகப் பெரும் பொறுப்பும் எம் எல்லோருக்கும் இன்று ஏற்பட்டிருக்கின்றது.

கொரோனா வைரஸின் வீரியத்தை விடவும் எமது அலட்சியமும் பொறுப்பு அற்ற தன்மையுமே நோயின் பரவுதலுக்கான பிரதான காரணமாக இன்று காணப்படுகின்றன. எங்கள் அலட்சியமே கொரோனா பரவுவதற்கான முதல் அறிகுறியாகும்.

தயவு செய்து வைத்தியசாலை பணிப்பாளர்கள், மருத்துவர்கள் மற்றும் சுகாதார அதிகாரிகள் எமக்கு வழங்கும் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக நாங்கள் எங்கள் வாழ்க்கை முறைமையை மாற்றி அமைத்துக் கொள்ளவேண்டும்.

நோயின் தாக்கம் தற்போது வடக்கு, கிழக்கின் பகுதிகளிலும் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் இயன்றளவுக்கு சமூகத்தில் இருந்து விலகி வாழப் பழகிக் கொள்வதுடன் அநாவசியப் பயணங்களைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

இந்த இக்கட்டான காலகட்டத்தில் அல்லும் பகலும் அயராது மருத்துவ பணியாற்றிவரும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை மற்றும் ஏனைய மாவட்டங்களின் வைத்தியசாலை பணிப்பாளர்கள் மற்றும் அனைத்து மருத்துவர்கள், தாதிமார்கள், சிற்றூழியர்களுக்கும் எனதும் எமது மக்களினதும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.

மருத்துவ செயற்பாடுகள் ஒருபுறம் இருக்க எமது மக்களை பதற்றம் அடையாமல் இருக்கும் வகையிலும், அதேவேளை அவர்கள் போதிய விழிப்புணர்வுடன் செயற்படும் வகையிலும் எமது மருத்துவர்கள் பணியாற்றுவதை அறிகின்றேன். இந்த வகையில் யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவ கலாநிதி சத்தியமூர்த்தி மற்றும் ஏனைய மருத்துவர்கள் விடுத்துவரும் கோரிக்கைகள், அறிவுறுத்தல்களுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.