ஊடரங்கு சட்டம் நீடிக்கப்பட்டமைக்கான காரணத்தினை வெளியிட்டார் பாதுகாப்பு செயலாளர்

ஊடரங்கு சட்டம் நீடிக்கப்பட்டமைக்கான காரணம் குறித்து பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன பொதுமக்களுக்கு விளக்கமளித்துள்ளார்.

காணொளி ஒன்றினை வெளியிட்டு அவர் இதுகுறித்து விளக்கமளித்துள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘கடந்த மார்ச் 20 ஆம் திகதி  முதல் அமுல்படுத்தப்பட்டு வரும் பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.

பாதுகாப்பு மற்றும் சுகாதார அமைச்சு ஆகியன வழங்கியுள்ள  அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறு  பொதுமக்களிடம்  கேட்டுக்கொள்கின்றேன்.

கொரோனா வைரஸ்  பரவலை தடுத்து  பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் ஒரு முன்கூட்டிய நடவடிக்கையாகவே ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

வைரஸ் பரவும் அபாயத்தை கட்டுப்படுத்தக்கூடிய கட்டத்திற்கு குறைக்கும் வரை பாதுகாப்பு அமைச்சினால்  மீண்டும் ஊரடங்கு சட்டம்  பிறப்பிக்கப்படும்.

இவ்வேளையில் மக்கள் தமது வீடுகளுக்குள் தரித்திருந்து அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்க வேண்டும்.

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பொதுமக்களின் ஒத்துழைப்பு இன்றியமையாததாகும். நாங்கள் நடமாட்டத்தை நிறுத்தி, நேரடி தொடர்புகளை தவிர்க்கா விட்டால்  வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவது கடினம்.

பொலிஸ் ஊரடங்கு அமுலில் உள்ளவேளையிலும்   அத்தியாவசிய சேவைகளுடன் இணைக்கப்பட்டுள்ள அரச அதிகாரிகள் தமது கடமைகளுக்கு சமூகமளிக்க சேவை அடையாள அட்டைகளைப் பயன்படுத்தலாம்.

யாழில் இடம்பெற்ற  சம்பவத்தின்  காரணமாகவே   மன்னார், வாவுனியா, கிளிநொச்சி, முல்லைதீவு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய ஐந்து மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம்  நீட்டிக்கப்பட்டுள்ளது.

அந்த மாவட்டங்களில் உள்ள  மக்களிடையே வைரஸ் பரவலை தடுக்கவேண்டிய நிர்பந்தம்  அரசாங்கத்திற்கு ஏற்பட்டதால், முழு வடக்கு பிராந்தியத்திலும் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்தும் இந்த திடீர் முடிவை எடுத்தோம்.

ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ளபோது பயணங்களை தவிர்த்து அனைவரும் தமது  வீடுகளில் இருக்க வேண்டும்.

நாட்டில் வசிக்கும்  22 மில்லியன் மக்கள்  பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் பொலிஸ் மற்றும் படை வீரர்கள் கொரோனா வைரஸிலிருந்து பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் நடவடிக்கைகளில்  ஈடுபட்டுள்ளனர்.

பொதுமக்கள் பொறுப்புடன் செயல்படவில்லை என்றால், படையினர்  மற்றும் பொலிஸ்  உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களும் செய்யும் கடினமான பணிகள் பயனற்றதாக அமைந்து விடுவதோடு  ஒட்டுமொத்த மக்களும் ஆபத்தினை எதிர்நோக்க வேண்டிவரும்“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.