கூலித்தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை!

நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதால் தினக் கூலி தொழிலாளர்களே அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளனர் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம்(செவ்வாய்கிழமை) பிரதமர் தலைமையில் இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டம் தொடர்பாக கருத்து வெளியிடும் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘பிரதமர் தலைமையிலான கட்சி தலைவர் கூட்டத்தில் தீவிர சிகிச்சை பிரிவு தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டது.

எனினும் அது பாரியதொரு பிரச்சினையல்ல. ஐ.டி.எச் மற்றும் நாடளாவிய ரீதியிலுள்ள ஏனைய வைத்தியசாலைகளில் முகக்கவசங்கள் மற்றும் சிகிச்சையின் போது அணியும் ஆடை என்பன பற்றாக்குறையேற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கொரோனா தொற்றாளர்கள் அல்லது சந்தேகத்தின் பேரில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு சிகிச்சையளிக்கும் போது மேற்குறிப்பிட்டவை அத்தியாவசியமானவையாகும். எனவே முதலில் அவற்றை போதியளவு பகிர்ந்தளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

மேலும் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதால் தினக் கூலி தொழிலாளர்களே அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறானவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சகல கிராம சேவகர் பிரிவுகளிலிருந்தும் இவ்வாறானவர்களின் தகவல்கள் சேகரிக்கப்பட்டு அவர்களுக்கான நிவாரணத்தை துரிதமாக வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம்.

இவ்வாறு நிவாரணங்களை வழங்குவதற்கும் கொரோனா ஒழிப்பிற்கான ஏனைய நடவடிக்கைகளுக்கும் அரசாங்கத்திற்கு முழுமையான ஒத்துழைப்பினை வழங்குவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தயாராகவுள்ளது’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.