யாழில் வங்கியில் பணம் எடுக்கச் சென்றவேளை தரமறுத்த சம்பவம்: பாதிக்கப்பட்ட தாயார் முறைப்பாடு!

வறுமைக் கோட்டுக்கு உட்பட்ட குடும்பம் ஒன்றுக்கு தனிநபர் கடன் தவணைக் கட்டணம் செலுத்தவில்லை என்ற காரணத்தைக் காண்பித்து வைப்பிலிட்ட பணத்தை மீளப்பெறுவதற்கு வங்கி முகாமையாளர் மறுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் இலங்கை வங்கியின் வட்டுக்கோட்டை கிளையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்றதாகப் பாதிக்கப்பட்ட தாயார் தெரிவித்தார்.

ஒரு மில்லியன் ரூபாய்க்கு உட்பட்ட வங்கிக் கடன் நிலுவைகள் அறவீட்டை 3 மாதங்களுக்கு இடைநிறுத்தி வைக்குமாறு வங்கிகளின் தலைவருக்குப் பணித்துள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது. இந்நிலையில் இந்தச் செயல் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட்டுக்கோட்டை (J/160) அராலி மேற்கைச் சேர்ந்த மயூரன் நிசாந்தினி என்பவரே வங்கி முகாமையாளரின் செயற்பாட்டால் தான் பாதிக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

அவர் கூறுகையில், “இலங்கை வங்கி வட்டுக்கோட்டைக் கிளையில் உறவினர் ஒருவர் அனுப்பிய 2 ஆயிரம் ரூபாய் பணத்தை மீளப்பெறுவதற்குச் சென்றிருந்தேன். கடந்த ஆண்டு அந்தக் கிளையில் ஒரு இலட்சம் ரூபாய் சுயதொழில் கடனைப் பெற்றிருந்தேன்.

கடன் தொகையினை காலம் தவறாது கடந்த மாதம் வரையிலும் சரியாக மீளச் செலுத்தி வந்துள்ளேன். இந்த மாதம் வீட்டு வறுமை காரணமாக உறவினர் வழங்கிய 2 ஆயிரம் ரூபாய் பணத்தினைப் பெறுவதற்கு வங்கிக்குச் சென்றபோது அதனை வழங்க மறுத்தனர்” என்று பாதிக்கப்பட்ட தாயார் தெரிவித்தார்.

தற்போதைய அவசரகால நிலையில் குறித்த விடயத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரி கரிசனை கொள்ளவேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.