ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்பட்ட பின்னர் பொதுமக்கள் பொருட்களை கொள்வனவு-பாதுகாப்பு குறைபாடு

சந்திரன் குமணன்
அம்பாறை.

ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்பட்ட பின்னர்    பொதுமக்கள் அதிகளவில் ஒன்று திரண்டு  தமக்கான பொருட்களை கொள்வனவில் ஈடுபட்டனர்.

அம்பாறை மாவட்டத்தில்   திங்கட்கிழமை(30) காலை ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்பட்ட பின்னர் பொதுமக்கள் தமக்கான பொருட்களைக் கொள்வனவு செய்ய மிகவும் துரிதமாக செயற்பட்டனர்.கல்முனை மாநகர  பிரதான வீதிகளில் சிறிது நேரம் வாகன நெரிசல் காணப்பட்டதுடன் இதனை போக்குவரத்து பொலிசார் சீர் செய்வதை அவதானிக்க கூடியதாக இருந்தது.

கல்முனை மாநகர  எல்லைக்குள் ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும்  தொடர்ந்து வர்த்தக நிலையங்களை மூட  கல்முனை மாநகர சபையினரால் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.எனினும்  இவ்வாறு எடுக்கப்பட்ட தீர்மானம் சில பகுதிகளில்  வெற்றி அளித்துள்ள போதிலும் பொதுமக்கள் தத்தமது தேவைகளை நிவர்த்தி செய்ய மாநகரப்பகுதியை நோக்கி வருகை தந்த வண்ணம் உள்ளனர்.

கல்முனை பொது சந்தை மூடப்பட்டபோதிலும் பாதையோரங்களில் மரக்கறி வியாபாரம் களைகட்டியது.  மேலும் சில  வியாபார நிலையங்கள் சுப்பர்மார்க்கெட்டுகள் பாமசிகள்  வங்கிகள் எரிபொருள் நிலையங்கள் வழமை போன்று திறக்கபட்டடு வியாபாரம் இடம்பெற்றது.

அத்துடன் இம்மாவட்டத்தில்  பெரிய நீலாவணை ,ஓந்தாச்சிமடம் , காரைதீவு ,சாய்ந்தமருது, மாளிகைக்காடு,  நிந்தவூர் ,அட்டப்பளம்,  சம்மாந்துறை மாவடிப்பள்ளி ,சவளக்கடை, மத்தியமுகாம் ,உள்ளிட்ட   முக்கிய இடங்களில் பொது மக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி நின்று பொருட்களை கொள்வனவு செய்தனர்.இதேவேளை தொடர்ந்தும் கல்முனை பிராந்திய சுகாதார சுகாதார சேவைகள் பணிமனையினால் பொது மக்களுக்கு கோரானா தொற்று தொடர்பாக அடிக்கடி விழிப்புணர்வு அறிவிறுத்தல் மேற்கொண்டு வருகின்றனர்.

வியாபார நிலையங்களில் பாதுகாப்பு பிரிவினர் மக்களை ஒழுங்கு படுத்தி வருவதுடன்  கல்முனை தொடக்கம் மாளிகை காடு வரையுள்ள கடற்கரை வீதிகளில் மீன்கள்,மரக்கறி வியாபார நிலையங்கள் அதிகம் காணப்பட்டது .அம்பாறை மாவட்டத்தில்bசில  பிரதேசங்களில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரம் பொதுமக்கள் வெளியில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மக்களின் அத்தியாவசிய தேவைக்காக இன்று மருந்தகங்கள் திறந்து வைக்கப்பட்டிருந்ததுடன் அரச ஒசுசலவில் மக்கள் நிரம்பி காணப்பட்டனர்.ஏனைய வர்த்தக நிலையங்கள் வியாபார தலங்கள்   பூட்டப்பட்டு பாதைகள் வெறிச்சோடி  காணப்படுகிறது.பாரிய சவாலாக அமைந்துள்ள கரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ளமை தொடர்ந்து நாடு ஊராகவும் ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்து வரும் நிலையில் அம்பாறை மாவட்டத்திலும் நண்பகல் 2 மணியின் பின்னர்  ஊரடங்கு நிலைமை தொடர்ந்தும் நீடிக்கப்பட உள்ளது.

கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசங்களில் வசிக்கும் வியாபாரிகளுக்கு தூர இடங்களில் இருந்து மரக்கறி மற்றும் கோழி முட்டை கொண்டு வந்து இறக்குமதி செய்யும் முறை வியாபாரிகளுக்கான அனுமதி   கல்முனை பொலிஸ் நிலையத்தில் பிரதேச செயலாளர்களின் அனுமதியுடன் வழங்கப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.