யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தியின் எச்சரிக்கை!

அளவுக்கு அதிகாமாக நோய் பற்றிய செய்திகளையும் வீடியோக்களையும் பார்வையிடுதல் மன உளைச்சலை ஏற்படுத்தக்கூடும் என யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி எச்சரித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில், “ஒருநாளில் ஒருசில தடவைகள் மாத்திரம் இந்நோய் நிலை பற்றிய தகவல்களுக்காக நம்பிக்கையான வலைத்தளங்களைப் பார்வையிடுங்கள். அளவுக்கு அதிகாமாக நோய்பற்றிய செய்திகளையும் காணொளிகளையும் பார்வையிடுதல் மன உளைச்சலை ஏற்படுத்தக்கூடும்.

மன உளைச்சல் பசி, தூக்கம் என்பவற்றைப் பாதிக்கின்றது. உளநல ஆரோக்கியத்தோடு நிறையுணவு, அமைதியான நித்திரை ஆகியவற்றால் பல நோய்களுக்கெதிரான நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கப்படுகின்றது. தற்போது பல சுகதேகிகள் அநாவசியமான மன உளைச்சலுக்கு உள்ளாகி தமது நோயெதிர்க்கும் ஆற்றலை தாமே குறைப்பதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

இவ்வாறான நிலமையில் தேவையற்ற செய்திகளைப் பார்ப்பதும் பகிர்வதும் தம்மையும் தம் சார்ந்தவர்களையும் மன உளைச்சலுக்குள்ளாக்கி நோயெதிர்ப்பை பாதிக்கும் தவறான செயல்களாகும். அடிக்கடி செய்திகளைப் பகிர்வதும் தவிர்க்கப்பட வேண்டும்.

ஆகவே, தேவையற்ற செய்திகளையும், காணொளிகளையும் பார்ப்பதையும் பகிர்வதையும் தவிர்த்து ஒருசில முக்கியமான செய்திகளை நம்பத்தகுந்த மூலங்களிலிருந்து பெறுவதன்மூலம் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் பாதுகாத்துக்கொள்ளுங்கள்” எனத் தெரிவித்தார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.