வீரத்தாய்க்கு சிறிதரன் அஞ்சலி!
விடுதலைப் போராட்டத்திற்கென தனது பிள்ளையை உகந்தளித்து பெருமாவீரனாக்கிய அன்னைக்கு சிரம் தாழ்த்தி அஞ்சலிக்கின்றோம் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதி ஜெயம் அவர்களின் அன்னையாரான காளீஸ்வரி பாலகுமார் அவர்கள் கடந்த 31.03.2020 அன்று காலமானதை அடுத்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரால் விடுக்கப்பட்டுள்ள இரங்கல் செய்தியிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்
அந்த செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது
களத்தின் கடைசிச் சாட்சியங்களும் அழியவிருந்த இறுதிப் போரின் 2009 இறுதி நாள் வரையும் களமாடிய வீரன். கையுயர்த்திச் சாவடையும் நிலமையை வெறுத்துக் கடைசிச் சொட்டு உயிருள்ள வரையும் எந்த மக்களின் விடுதலைக்காக ஆயுதம் ஏந்தினார்களோ அந்த மக்களின் நினைவோடும் அந்த மண்ணின் கனவோடும் தங்கள் இறுதி மூச்சையும் இலட்சியக்கனவையும் சுமந்து கொண்டு முள்ளிவாய்க்கால் மண்ணில் கணவன் மனைவி இருவருமாக களத்தில் நின்று களமாடி எந்த மண்ணை மீட்க போராடினாரோ அந்த மண்ணை தன் நெஞ்சோடு அணைத்தாவாறே வீரவரலாறானவர்.
கேணல் ஜெயம் என்னும் பெயரைக் கேட்டாலே இலங்கை இராணுவம் அச்சம் கொள்ளும் அளவுக்கு அவர் தாக்குதல் யுக்திகள் இருந்தது. தேசிய தலைவரின் நம்பிக்கைக்குரிய தளபதியாக அவர் என்றும் இருந்தார் விடுதலைப் புலிகளின் மூத்த தளபதி ஜெயம் அவர்களின் அன்னைக்கு எனது இதயம் நிறைந்த அஞ்சலிகள்.
விடுதலைப் போராட்டத்திற்கென தனது பிள்ளையை உகந்தளித்து பெருமாவீரனாக்கிய இந்த உன்னத அன்னைக்கு எமது கண்ணீர் அஞ்சலிகளை காணிக்கை ஆக்குகின்றோம். இவரது ஆண்மா நித்திய சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போமாக.
தாய்நாட்டின் விடிவுக்காக தங்கள் இன்னுயிரை உவந்தளித்த மாவீரர்களின் பெற்றோர்கள் உள்ளிட்ட அவர்களின் உறவுகள் அனைவரும் மரியாதைக்குரியவர்கள் என்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரின் இரங்கல் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
![](https://www.newsuthanthiran.com/wp-content/uploads/2020/04/FB_IMG_1585849856917.jpg)
![](https://www.newsuthanthiran.com/wp-content/uploads/2020/04/FB_IMG_1585849854012.jpg)
![](https://www.newsuthanthiran.com/wp-content/uploads/2020/04/1585847041082.jpg)
கருத்துக்களேதுமில்லை