சிறுபான்மையினரின் மத உரிமையை இலங்கை அரசு மதித்தே ஆகவேண்டும் – சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்து

சிறுபான்மையினர் தங்கள் சொந்த மரபுகளுக்கு ஏற்ப உறவினர்களின் இறுதிச் சடங்குகளைச் செய்வதற்கு உள்ள உரிமையை இலங்கை அரசு மதிக்க வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது.

“நெருக்கடியான தருணத்தில் அதிகாரிகள் சமூகங்களை இணைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும். ஏற்கனவே உள்ள விரிசல்களை ஆழமாக்க முயலக்கூடாது” எனவும் சர்வதேச மன்னிப்புச் சபையின் தென்னாசியாவுக்கான இயக்குநர் பிராஜ் பட்நாயக் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக துயரத்தில் உள்ள உறவினர்கள் தாங்கள் விரும்பும் விதத்தில் தங்கள் குடும்பத்தவர்களுக்கு இறுதி மரியாதையைச் செலுத்த வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சர்வதேச வழிகாட்டுதல்களுக்கு ஏற்ப இது சாத்தியமாக உள்ள பட்சத்தில் அதற்கான அனுமதி வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“இலங்கை அரசு மார்ச் 27 ம் திகதி வெளியிட்ட அறிவுறுத்தல்கள் இறந்தவர்களின் உடல்களைப் பாதுகாப்பாகக் கையாள்வது குறித்த உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிவுறுத்தல்களை அடிப்படையானவையாகக் காணப்பட்டன.

இதில் இறந்தவர்களின் உடல்களைப் புதைப்பது அல்லது தகனம் செய்வது குறித்து சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

எனினும், மார்ச் 31ஆம் திகதி கொரோனா வைரஸால் உயிரிழப்பவர்களின் உடல்களைத் தகனம் செய்யும் விதத்தில் இலங்கை அரசு தனது கொள்கையை மாற்றியமைத்தது.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் வழிகாட்டுதல்களில் இருந்து விலகியமைக்கான காரணத்தை இலங்கை அரசு இன்னமும் வெளியிடவில்லை.

இதன்காரணமாக இந்த நடைமுறைகள் பொது சுகாதாரத்தைப் பாதுகாப்பதற்கு அவசியமற்றவை என்ற கரிசனை எழுந்துள்ளது.

இலங்கையில் சிறுபான்மையினராகக் காணப்படும் முஸ்லிம் சமூகத்தினர் இஸ்லாமிய பாரம்பரியத்தின் அடிப்படையில் உடல்களைப் புதைப்பது அவசியம் எனக் கருதுகின்றனர்.

நீர்கொழும்பில் உயிரிழந்தவரின் உடல் உறவினர்கள், சமூக தலைவர்கள், முஸ்லிம் அரசியல்வாதிகளின் எதிர்ப்புக்கு மத்தியிலும் எரியூட்டப்பட்டது.

கொழும்பில் உயிரிழந்த இரண்டாவது முஸ்லிம் பிரஜையின் உடலும் அவ்வாறே தகனம் செய்யப்பட்டது.

பலவந்தமாகத் தகனம் செய்யப்படுவது முஸ்லிம் மக்கள் மத்தியில் தாங்கள் அதிகாரிகளால் இலக்குவைக்கப்படுகின்றோம் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, மத மற்றும் கலாசார உணர்வுகளைக் கருத்தில்கொண்டு செயற்படுவதை இலங்கை அரசு உறுதி செய்யவேண்டும்.

மேலும், இதன்போது சர்வதேச விதிமுறைகள் பின்பற்றப்படவேண்டும். குறிப்பிட்ட சமூகத்தினருடன் கலந்தாலோசனைகளை நடத்திய பின்னர் அதில் மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை கேட்டுக்கொள்கின்றது.

‘கொரோனா’ குழுக்களிடையே பாரபட்சம் பார்ப்பதில்லை. அனைத்து மதத்தவர்களும் அதனால் பாதிக்கப்படடுள்ளனர்” – என்றார்.
……..

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.