அம்பாறையில் அதிகூடிய விலையில் பொருட்கள் விற்பனை- கடும் நடவடிக்கைக்கு ஆயத்தம்!

அம்பாறை மாவட்டத்தில் ஊரடங்கு தளர்த்தப்பட்ட காலத்தில் பிரத்தியேகமான சந்தைகள் மற்றும் மொத்த விற்பனை நிலையங்களில் பாவனையாளர்களைப் பாதுகாக்கும் வகையிலான நிர்ணய விலைகளை அமுல்படுத்துவது தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதுகுறித்த கலந்துரையாடல், அம்பாறை அரசாங்க அதிபர் டி.எம்.எல்.பண்டாரநாயக்கவின் தலைமையில் மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் இன்று (சனிக்கிழமை) நண்பகல் இடம்பெற்றது.

இதில், அம்பாறை புதிய மேலதிக அரசாங்க அதிபர்களான வி.ஜெகதீஷன் ஏ.எம்.அப்துல் லத்தீப் ஆகியோர் உட்பட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.

இதன்போது, அரசாங்கம் அத்தியவசியப் பொருட்களுக்கு விதித்த நிர்ணய விலை தவிர்ந்த ஏனைய பொருட்களுக்கு இம்மாவட்டத்தில் விலை நிர்ணயம் செய்யப்படவுள்ளன.

மேலும், பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட சந்தைகள் மற்றும் மொத்த விற்பனை நிலையங்களில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள மரக்கறி வகைகள், மீன்வகைகள் உள்ளிட்டவைகளுக்கு நிர்ணயவிலை ஒன்றினைத் தீர்மானிப்பதற்காக இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதுதவிர நிர்ணய விலையை மீறி விலைக்கட்டுப்பாடு இன்றி விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்களை சுற்றிவளைப்புகளை மேற்கொண்டு சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

அண்மைக்காலமாக ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்ட பின்னர் சில வியாபாரிகள் எதுவித விலை நிர்ணயமும் இன்றி அதிகரித்த விலைகளுடன் நுகர்வோரை சிரமங்களுக்கு உள்ளாக்கி வருவதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

இந்நிலையில், பொதுமக்களுக்கு கட்டுப்பாட்டு விலைகளில் அத்தியாவசியப் பொருள்கள் கிடைப்பதனை உறுதிப்படுத்தும் முகமாக இந்தத் தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.