சரியான பொறிமுறை இல்லை.. இந்நிலையில் நாடாளுமன்றை கூட்டி பிரச்சினையை வளக்க கூடாது – முன்னாள் நீதி அமைச்சர்

சரியான பொறிமுறையில்லாத நிலையில் மீண்டும் நாடாளுமன்றத்தினைக் கூட்டி பிரச்சினைகளை வளர்க்க வேண்டிய அவசிமில்லை என முன்னாள் நீதி அமைச்சரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

நாடாளுமன்ற தேர்தலை நடத்தவதற்கான காலத்தினை “அவசியக் கோட்பாட்டின்” அடிப்படையில் தீர்மானிக்க முடியும் என்றும் ஆனால் கலைந்த நாடாளுமன்றத்தினை மீண்டும் கூட்டவேண்டிய அவசியமில்லை என்றும் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுமாறு பலர் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் அது குறித்த அதிகாரம் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே விஜயதாச ராஜபக்ஷ மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “தற்போது எட்டாவது நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு ஒன்பதாவது நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இருப்பினும் இவ்வாறான நிலையில் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக தொடர்ச்சியாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் நாடாளுமன்றத்தினை மீண்டும் கூட்டவேண்டும் என்ற வலியுறுத்தப்படுகின்றது.

அவ்வாறிருக்க, நாடாளுமன்றத்தினை மீண்டும் கூட்டுவதாக இருந்தால் அரசியலமைப்பின் 155ஆவது சரத்திற்கு அமைவாக ஜனாதிபதிக்கு அதிகாரங்கள் உள்ளன. அதாவது, பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் தயாரிக்கப்பட்டே நாடாளுமன்றத்தினைக் கூட்டமுடியும்.

ஆனால் நாட்டில் போர்ச்சூழல் காணப்படவில்லை. தொற்று நோய் சார்ந்த பிரச்சினை தான் உள்ளது. ஆகவே அவசர ஒழுங்குவதிகள் தயாரிக்கப்படாத நிலையில் தொற்றுநோய்ச் தடுப்பு கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் அதற்கான தீர்வுகளைப் பெற்றுக்கொள்வதற்கான ஏதுநிலைமைகள் காணப்படுகின்றன.

அதேநேரம், சட்ட விடயங்களுக்கு அப்பால் நாடாளுமன்றத்தினை கூட்டினால் அங்கு இந்த பிரச்சினைக்கு தீர்வினைப் பெறுவதற்கான முறைமை என்னவாக இருக்கின்றது. அவ்வாறான முறைமையொன்றோ அல்லது பொறிமுறையோ இல்லாத நிலையில் மீண்டும் நாடாளுமன்றத்தினைக் கூட்டி பிரச்சினைகளை வளர்க்க வேண்டிய அவசிமில்லை.

அதேநேரம், தற்போதைய சூழலில் பொதுத்தேர்தலை நடத்தமுடியாத சூழல் நிலவுகின்றமை வெளிப்படையாகின்றது. அவ்வாறான நிலையில் அதனை குறிப்பிட்ட காலத்திற்கு ஒத்திவைப்பதே சிறந்ததாகவும். அதுபற்றிய உயர்நீதிமன்றத்தின் அபிப்பிராயத்தினைக் கோருமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனாதிபதியைக் கோரியுள்ளார்.

பொதுத்தேர்தலை ஒத்திவைப்பதற்கு சட்டரீதியான ஏற்பாடுகள் காணப்படாது விட்டாலும் நாட்டில் ஏற்பட்டள்ள நிலைமையை அடிப்படையாகவும் உலகத்தில் கடந்த காலத்தில் அதாவது எபோலாபோன்ற நோய்களின் தீவிரத்தன்மையின்போது அந்நாடுகள் எடுத்த தீர்மானங்களை முன்னுதாரணமாகக் கொண்டு முடிவுகளை எடுக்க முடியும்.

குறிப்பாக, அவசியக் கோட்பாட்டின் அடிப்படையில் பாராளுமன்றத் தேர்தலை ஒத்திவைப்பதற்கான சகல அதிகாரங்களும் உள்ளன. தேர்தல் போட்டிக்கு அப்பால் பொதுமக்களின் உயிர்ப்பாதுகாப்பு முக்கியமானது” என குறிப்பிட்டார்.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.